காடு – இதழ் அறிமுகம்

(காடு இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்வில் பேசிய பேச்சின் விரிவான வடிவம்)

ஐவன வெண்ணெலும், அறைக் கண் கரும்பும்,
கொய் பூந் தினையும், கொழும் புன வரகும்,
காயமும், மஞ்சளும், ஆய் கொடிக் கவலையும்,
வாழையும், கமுகும், தாழ் குலைத் தெங்கும்,
மாவும், பலாவும், சூழ் அடுத்து ஓங்கிய
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்:

சிலப்பதிகாரத்தில் வரும் காடுகாண்காதையில் மதுரைக்கு செல்லும் வழி குறித்த விவரிப்பில் மதுரைக்கும் திண்டுக்கல்லுக்கும் இடையே இருக்கும் சிறுமலை குறித்த வர்ணனை இது. இயற்கையை கலைக்கண் கொண்டு ரசித்தவன் மனிதன். இன்று கலைக்கண் கொன்று அழிப்பவனும் மனிதன் தான்.

நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே என்று சங்க காலத்திலேயே பாடல் இயற்றிய எம்மக்களுக்கு இயற்கையை பாதுகாப்பது முக்கியம் என்ற கூற்று நன்றாகவே தெரியும். மரக்கிளைகளின் நுனிகளை கிழிப்பதை கூட அறமற்ற செயலாக கருதிய மனிதர்கள் பேராசையும் சுற்றுச்சூழல் பற்றும் அற்றுப் போய் தான் வன அழிப்பில் ஈடுபடுகிறார்கள். தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த காடழிப்பு நடந்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த இருபது வருடங்களில் மட்டும் சுமார் 12000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு காடுகள் அரசின் அனுமதியோடு இந்தியாவில் அழிக்கப்பட்டுள்ளன.

காடு குறித்த தனிமனிதனின் பார்வை மிகவும் குறுகலானது என்றே தைரியமாய் சொல்லலாம். அவனுக்கு தெரிந்ததெல்லாம் மலையொன்று கண்டவுடன் அதனருகில் ஒரு கோவில் கட்டுவது, ஓடையோன்று தெரிந்தால் அதனருகில் குடித்து குப்பியை உடைப்பது. ஒரு பொதுவிடத்தில் நன்னீர் ஆதாரம் ஒன்றை கண்ணாடி குப்பிகளால், நெகிழி குப்பைகளால் நிரப்புவதென்பது இயற்கை மீதான ஒரு தீவிரவாத தாக்குதலே ஆகும்.

தற்காலத்தில் பாலைவனங்கள் என்று அறியப்படும் மத்திய தரைக்கடல் பகுதிகளும் வடக்கு சீன மாகாணமும் ஒரு காலத்தில் உலகத்தின் உணவு உற்பத்தி கூடங்களாய் இருந்தது. காடு அழிப்பும் முறையற்ற விவசாயமும் விலங்குகளை மேய விடுதலும் இணைந்து இந்த உணவு கலயங்களை பாலைவனங்கள் ஆக்கி விட்டன. மேலும் அதே தவறை செய்து கொண்டே போகிறோம். சுழற்சி முறையில் பயிரிட்டால் அந்த நிலத்தின் வளம் பாதுகாக்கப்படும் என்று அறிந்து கொண்டே சுழற்சி முறை விவசாயத்தை நாம் தவிர்த்துக் கொண்டே இருக்கிறோம். தவிர்ப்பது மட்டும் ஒரு கவலை இல்லை. பல்கிப் பெருகும் மக்கள் தொகையின் தேவைக்கு ஏற்ப உணவு உற்பத்தி செய்ய மேலும் காடுகளை அழித்து விவசாய நிலங்களையும் மேய்ச்சல் நிலங்களையும் சேர்த்துக் கொண்டே போகிறோம்.

இன்று இந்த உணவு உற்பத்தி என்னும் மேலமையான தொன்மையான விவசாயம் வியாபாரமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. மத்திய ஆப்பிரிக்காவின் பெருவனங்களை அழித்து பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் விவசாய வியாபாரம் செய்யப்படுகிறது. இதில் பெரும் பங்கு இந்தியர்களை சாரும். நில அபகரிப்பு என்று நாம் குரல் எழுப்பும் காலத்தில் நம் கண்ணுக்கு தெரியாமலேயே நம் நிலவளங்கள் சுரண்டப்படுவது நமக்கு பெரும் அதிர்ச்சியை பிற்காலத்தில் உண்டாக்கும்.

காடு என்பது என்ன? காட்டை ஏன் நாம் பராமரிக்க வேண்டும்? இத்தகைய கேள்விகளுக்கு பதில் பள்ளி நூல்களில் கிடைக்கும். அனுபவரீதியாக காட்டின் உயிர்வளியை நுகர்ந்த பேரனுபவம் கிடைத்தவர்கள் சிலர் மட்டுமே. அடர்ந்த காட்டின் மரம் சூழ் சோலைகளில் இருக்கும் உயிர்வளியின் தாக்கம் மலைச்சாலையோர பேருந்துப் பயணங்களில் கிட்டுவதில்லை. காட்டுக்குள் பிரயாணிப்பது என்பது பெரியதோர் ஆபத்தும் அல்ல. வாகனங்கள் பறக்கும் சாலைகளில் நடக்கும் விபத்துகளோடு ஒப்பிடுகையில் காட்டில் இருக்கும் வனவிலங்குகளின் தாக்குதலோ, திடீர் வெள்ளமோ, தொலைந்து போதலோ பெரிய அபாயங்கள் இல்லை.

காடு என்பது சுற்றுலாவிற்கு நாம் செல்லும் ஒரு தலமல்ல. அது வனவிலங்குகளும் மலைவாழ் மனிதர்களும் மரங்களும் பூச்சிகளும் இணைந்து வாழும் ஒரு பல்லுயிரியம். விரிந்து கிடக்கும் காட்டின் உள்ளே பயணம் செய்வதென்பது உங்கள் உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்தி புத்துயிர் ஊட்டுவது. மலைப்பயணங்களோடு மழை சேர்ந்து கொள்ளும் தருணங்களில் குதிங்காலில் ஈரம் பட மெல்ல நடை போடுவது ஆனந்தம். வெள்ளி உருகி ஓடுவது போன்ற நீரோடை தரும் நீர்ச்சுவையை எந்த செயற்கை தண்ணீர் போத்தல் தந்து விடும்? இன்றைக்கும் அருவி கண்டால் அடியில் சென்று நின்று விடுகிறானே மனிதன். அந்த அனுபவமே சாலச்சுகம். அதுவே நிதர்சனம்.

நானோர் காடோடி அல்ல. நகர வாசி. மேலும் தெளிவாய் சொல்லின் நரக வாசி. நகரத்திலும் நரகத்திலும் இருப்பது ஒரே எழுத்துக்கள் தான். அமைந்திருக்கும் இடம் மட்டுமே வித்தியாசம். நகரில் இருக்கும் எனக்கு காடு குறித்த ஆர்வம் எப்படி வந்திருக்கும் என்ற கேள்வி எழக்கூடும். கேள்விக்கு பதில் எனக்கே தெரியாது என்பது தான் உண்மை. இயற்கையை ரசிக்கும் எவருக்கும் காடு தான் உச்சம். காட்டை தாண்டி வேறொன்றும் இல்லை. காடின்றி எதுவுமே இல்லை. காட்டுக்குள் தான் மனிதன் மனிதனானான். மரத்தில் இருந்து இறங்கி நிமிர்ந்து நின்ற முதல் மனிதன் பார்த்த முதல் உலகம் காடுகளால் சூழப்பட்டதுதான். பேபீஸ் என்ற பிரஞ்சு டாக்குமெண்டரியில் வாழ்க்கையின் முதல் வருடத்தை வெவ்வேறு இடங்களில் பிறந்த குழந்தைகள் எப்படி கழிக்கின்றன என்பதை காட்சிப்படுத்தியிருப்பார்கள். அதில் ஒரு சீனக் குழந்தையால் எழுந்து நிற்க இயலாது. கடும் முயற்சிக்கு பின் ஒரு பசும்புல்வெளியில் அந்த குழந்தை எழுந்து நின்று சிரிப்பதோடு அந்த படம் முடியும். அது போன்றதொரு உச்சத்தை எனக்கு என் முதல் காட்டுப் பயணம் தந்தது. தந்து கொண்டேயிருக்கிறது.

காடு நமக்கு தந்தது போதும். நாம் காட்டுக்கு என்ன தரப்போகிறோம் என்ற கேள்வி எனக்குள் எழுந்து கொண்டேயிருந்தது. காடு குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் காடு என்ற பல்லுயிரியம் எவ்வாறு நமக்கு இன்று வரை சோறூட்டுகிறது என்று விளங்க வைக்கவும் ஒரு கருவி நமக்கு வேண்டியிருக்கிறது. இன்று தினமும் காட்டிற்குள் பிரயாணித்து மக்களை அழைத்து சென்று பேசும் நிலையில் நாம் இல்லை. ஆனால் காடு நம்முள் பிரயாணித்துக் கொண்டே தான் இருக்கிறது புத்தக வடிவில்.

390_thumb_1390_thumb_1 (1)

சுற்றுச்சூழலை பேண, வனநலன் காக்க பெரும் விழிப்புணர்வு உருவாக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இன்று உள்ளது. வன உரிமை சட்டம் என்று தொல்குடிகள் உரிமைக்காக தனி சட்டம் இயற்ற வேண்டிய தேவை எதனால் ஏற்பட்டது என்று ஆராய்ந்து அதற்கான பதிலில் அந்த காரணங்களுக்கான தீர்வை சொல்ல வேண்டிய தருணம் இது. இந்த சூழ்நிலையில் சுற்றுச்சூழலியல் குறித்த பத்திரிக்கை ஒன்று தொடர்ந்து வருவது அவசியம் என்றே நான் கருதுகிறேன். காடு அதற்கான தேவையை தக்க வைத்துக் கொள்ளும் என்று நான் தீவிர நம்பிக்கை கொண்டுள்ளேன்.

ரப்பர் தோட்ட தொழிலாளிகளுக்காக போராடிய பிரேசிலின் சிக்கோ மென்டிஸ் போலவோ, பாமாயில் வணிகத்தில் இருந்து சுமாத்ர வனங்களை காக்க போராடிய இந்தோனேசியாவின் ரூடி புத்ராவை போலவோ, தனி ஒருவனாய் ஒரு காட்டையே உருவாக்கிய ஜாதவ் பாயேங் போலவோ இன்னொரு இயற்கை விரும்பி தானாக உருவாகப்போவதில்லை. ஆனால் காடு போன்ற இதழ்கள் மூலம் ஊட்டப்படும் தொடர் விழிப்புணர்வின் மூலம் நம்மால் இன்னொரு சிக்கோ மென்டிசையோ ரூடி புத்ராவையோ உருவாக்க முடியும்.

காடு இதழ் ஒரு புள்ளியை நோக்கி பயணிப்பது போல் எனக்கு தோன்றவில்லை. வன பாதுகாப்பு மட்டுமல்லாமல் பழங்குடி மக்கள், வன உயிரினங்கள், பறவைகள், பூச்சிகள் என்று பல தளங்களில் ஒரு விசாலமான பார்வையோடு ஒரு தெளிவான நோக்கத்தோடு பயணிப்பது சிறப்பு. “காடுகாட்டை போலவே எந்த குறுக்கீடும் தடங்கலும் இன்றி சுதந்திரமாய் வளர, பல மொழிகளிலும் விரிவுற்று பயணிக்க, எனது வாழ்த்துகள். நன்றி.

காடு இதழ் பெற:

இங்கே சுட்டவும்

ஒரு வருடம் – ரூபாய் 300

இரண்டு வருடங்கள்  – ரூபாய் 600.

மேலும் தொடர்புக்கு:

Thadagam Publications

1st Floor, Venkateshwara Complex,
112 Thiruvalluvar Salai
Thiruvanmiyur, TN. IN 600 041

91.44 4310.0442 (main number)
91.8939967179 (mobile number)

படிக்க வேண்டிய மொழிபெயர்ப்பு நூல்கள்.

சமீபத்தில் டிஸ்கவரி புக் பேலசும் கதைகள் பேசுவோம் அமைப்பும் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடன் இணைந்து நடத்திய நாவல் முகாமில் கலந்து கொண்டேன். சிறுமலை அடிவாரத்தில் இருந்த LIFE சென்டரில் நடந்த இந்த முகாமில் கிட்டத்தட்ட 60 பேர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் எஸ்ரா அவர்கள் ஆழ்ந்து படிக்கவேண்டிய பல நூல்களை பற்றி பேசினார். மொழிபெயர்ப்பின் உன்னதம் குறித்து மொழிபெயர்ப்பாளர் தேவதாஸ் அய்யாவும் திறனாய்வாளர் முருகேசபாண்டியன் அய்யாவும் பேசினார்கள். மணிகண்டன், தேவதச்சன், வினாயகமுருகன், ஹூபர்ட், மதுமலரன், சித்திரவீதிக்காரன் சுந்தர் மற்றும் பல எழுத்தாளர்கள், இளம் வாசகர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றோம்.

இந்த நூல் வரிசை எஸ்ராவின் வலைப்பதிவிலும் இடம்பெற்றுள்ளது. ஆயினும் இங்கு பகிர்வதற்கு காரணம் ஒன்றுண்டு. இந்த புத்தகங்களின் மூலங்களை எங்கெங்கோ தேடி சேகரித்து கொடுக்க வேண்டும் என்று ஒரு முயற்சி. தமிழில் வாசிப்பது சுவாரஸ்யமாய் இருந்தாலும், வேகமாய் நிகழ்ந்தாலும் எந்நேரமும் புத்தகம் கையில் வைத்திருக்க இயலாத என் போன்றோருக்கு அலைபேசியில் சேகரித்து வைத்துக் கொள்ள இந்த பதிவு உதவும்.  என்னால் இயன்றவரை தேடி இதில் பதிந்துள்ளேன். கிடைக்காத புத்தகளின் தரவு எங்கேனும் இருந்தால் பின்னூட்டமிடுங்கள். நான் சேர்த்து விடுகிறேன்.

நூல்கள்:

  1. புத்துயிர்ப்பு – லியோ டால்ஸ்டாய். – அனைத்து படைப்புகளும் உள்ளன.
  2. மண்கட்டியை காற்று அடித்துப்போகாது – பாஸி அலியேவா.
  3. சக்கரவர்த்தி பீட்டர் – அலெக்ஸி டால்ஸ்டாய்.
  4. அன்னை வயல் – சிங்கிஸ் ஐத்மதோவ்
  5. மாறிய தலைகள் – நட் ஹாம்சன்
  6. மங்கையர்கூடம் – பியர்ல் எஸ் பக்.
  7. மதகுரு – செல்மா லாகர்லேவ்
  8. பிளாடெராவும் நானும் – ஜோன் ரமோன் ஜிமனேஸ்
  9. அந்நியன் – அல்பேர் காம்யூ
  10. கொள்ளை நோய் – அல்பேர் காம்யூ
  11. விசாரணை – காப்கா
  12. வீழ்ச்சி/சிதைவுகள் – சினுவா அச்சிபி
  13. பீட்டர்ஸ்பர்க் நாயகன் – கூட்ஸி
  14. புலப்படாத நகரங்கள் – இடாலோ கால்வினோ
  15. ஒன்று கலந்திடும் விதிகளின் கோட்டை – இடாலோ கால்வினோ
  16. தூங்கும் அழகிகளின் இல்லம் – யசுநாரி கவாபடா
  17. தாத்தாவும் பேரனும் – ராபர்ட் டீ ரூவாக்
  18. நாநா – எமிலி ஜோவாக்
  19. டாம் சாயரின் அனுபவங்கள் – மார்க் ட்வைன்
  20. ஆலிஸின் அற்புத உலகம் – லூயி கரோல்
  21. காதலின் துயரம் – வுல்ப்காங் வான் கொதே
  22. அவமான சின்னம் – நத்தானியல் ஹதொர்ன்
  23. கானகத்தின் குரல் – ஜாக் லண்டன்.
  24. சிலுவையில் தொங்கும் சாத்தான் (Caitaani mutharaba-Ini) – நுகூகி
  25. அபாயம் – ஜோஷ் வண்டலூ
  26. கால யந்திரம் – ஹெச்.ஜி.வெல்ஸ்
  27. விலங்குப்பண்ணை – ஜார்ஜ் ஒர்வெல்
  28. ரசவாதி – பாவ்லோ கோயலோ
  29. கோதானம் – பிரேம்சந்த்
  30. சம்ஸ்காரா – யூ.ஆர். அனந்த மூர்த்தி
  31. நமக்கு நாமே அந்நியர்கள் – அக்நேயர்
  32. செம்மீன் – தகழி சிவசங்கரன் பிள்ளை
  33. கயிறு – தகழி சிவசங்கரன் பிள்ளை
  34. அழிந்தபிறகு – சிவராம் காரந்த்
  35. மண்ணும் மனிதர்களும் – சிவராம் காரந்த்
  36. நீலகண்ட பறவையைத் தேடி – அதின் பந்தோபத்யாய
  37. அக்னி நதி – குல் அதுல்துன் ஹைதர்
  38. ஆரோக்ய நிகேதனம் – தாராசங்கர் பானர்ஜி
  39. கரையான் – சீர்செந்து முங்கோபாத்யாய
  40. பதேர் பாஞ்சாலி – பிபூதி பூஷன் பந்தோபாத்யாய
  41. பொம்மலாட்டம் – மாணிக் பந்தோபாத்யாய
  42. பொலிவு இழந்த போர்வை – ராஜேந்தர்சிங் பேடி
  43. இரண்டாம் இடம் – எம்.டி.வாசுதேவன் நாயர்
  44. பாண்டவபுரம் – சேது
  45. தமஸ் – பீஷ்ம சஹானி
  46. பர்வா – எஸ்.எஸ்.பைரப்பா
  47. நிழல் கோடுகள் – அமிதவ் கோஷ்
  48. சிப்பியின் வயிற்றில் முத்து – போதிசத்வ மைத்ரேயா
  49. எங்கள் உப்பப்பாவிற்கு ஒரு ஆனையிருந்தது – வைக்கம் முகமது பஷீர்
  50. பாத்துமாவுடைய ஆடு – வைக்கம் முகமது பஷீர்
  51. சப்தங்கள் – வைக்கம் முகமது பஷீர்
  52. மதில்கள் – வைக்கம் முகமது பஷீர்
  53. விடியுமா – சதுர்நாத் பாதுரி
  54. மய்யழிக்கரையோரம் – முகுந்தன்
  55. பன்கர்வாடி – வெங்கடேஷ் மால்கூடகா
  56. சோரட் உனது பெருகும் வெள்ளம் – ஐவேர்சந்த் மேகானி
  57. தர்பாரி ராகம் – ஸ்ரீராம் சுக்லா
  58. லட்சிய ஹிந்து ஹோட்டல் – பிபூதிபூஷன் பந்தோபாத்யாய
  59. கங்கை பருந்தின் சிறகுகள் – லட்சுமி நந்தன் போரா
  60. அவன் காட்டை வென்றான் – கேசவரெட்டி
  61. அரைநாழிகை நேரம் – பாறபுரத்து
  62. சிக்கவீர ராஜேந்திரா – மாஸ்தி
  63. எரியும் பனிக்காடு – டேனியல்
  64. பனி – ஓரான் பாமுக்
  65. தனிமையின் நூறு ஆண்டுகள் – கப்ரியல் கார்சியா மார்க்வெஸ்
  66. ஓநாய் குலச்சின்னம் – ஜியாங் ரோங்
  67. மௌனவதம் – ஆர்துவோ
  68. சின்ன விஷயங்களின் கடவுள் – அருந்ததி ராய்
  69. அராபிய இரவுகளும் பகலும் – மாபௌஸ்
  70. டான் க்விக்சாட் – செர்வாண்டிஸ்
  71. முதல் மனிதன் – அல்பேர் காம்யூ
  72. கா – ராபர்டோ கலாசோ
  73. மணற்குன்றுப் பெண் – கோபோ அபே
  74. நள்ளிரவின் குழந்தைகள் – சல்மான் ருஷ்டி

நான் சேர்த்த புத்தகங்கள்:

  1. தீண்டாத வசந்தம் – ஜி.கல்யாண ராவ்
  2. மகிழ்ச்சியான இளவரசன் – ஹெச்.ஜி.வெல்ஸ்
  3. டோட்டோ சான் ஜன்னலோரத்தில் சிறுமி – டேட்சுகோ குரயோனாகி
  4. பட்டாம்பூச்சி – ஹென்றி சாரியர்
  5. அசடன் – தஸ்தாவ்யெவ்ஸ்கி
  6. அப்பாவின் துப்பாக்கி – ஹிநெர் சலீம்
  7. ஆறாவது வார்டு – அன்டன் செகோவ்
  8. இறைச்சிக்காடு – அப்டன் சின்க்ளைர்
  9. ஏழு தலைமுறைகள் – அலெக்ஸ் ஹேலி
  10. கானுறை வேங்கை – உல்லாஸ் கரந்த்

காவல் கோட்டம்–ஒரு பாமரனின் பார்வை

சு.வெங்கடேசனுடன் எனக்கு அவ்வளவாய் பழக்கமில்லை. ஒரே ஒரு முறை சந்தித்து இருக்கிறேன். அவர் எனக்கு எந்த வித பொருளுதவியும் செய்ததில்லை. அவரது அரசியல் நிலைப்பாடுகள், இலக்கிய செயல்பாடுகள், பொதுக்கருத்துக்கள் போன்றவற்றுடன் எனக்கு யாதொரு தொடர்பும் இல்லை. சில கருத்துக்களோடு ஒப்புதல் கூட இல்லை. இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் தெரியுமா? காவல் கோட்டம் என்னும் இந்த வரலாற்று புதினத்தை விமர்சனம் செய்ய எனக்கு இருக்கும் ஒரே தகுதி நானோர் வாசகன் என்பதே. வேறு எந்த முகாந்திரமும் இல்லை. நல்லதும் கெட்டதும் சேர்த்தே சொல்கிறேன், ஒரு வாசகனின் பார்வையில். நன்றி.

முதன்முதலில் காவல் கோட்டம் நூலை சென்னை லேன்ட்மார்க் புத்தக கடையில் பார்த்த போதே வாங்க வேண்டும் என்று நினைத்தேன். பணமில்லை. பிறகு சிறிது பணம் சேர்ந்த பிறகு தேடிக் கண்டுபிடித்து வாங்கினேன். வாங்கிய உடன் படிக்கவில்லை. சிறிது நாட்களுக்கு பிறகே படிக்க ஆரம்பித்தேன். முதல் முயற்சி அயர்ச்சியைத் தந்தது. 300 ஆண்டுகால விஜயநகர மதுரை வரலாற்றை தாண்டுவதற்குள் பிற வேலைகள் வந்து ஆக்கிரமித்ததால் புத்தகத்தை மதுரையில் வைத்து விட்டு சென்னை சென்று விட்டேன்.

ஒரு மாதம் சென்றிருக்கும். சுத்தமாய் நினைவில் இல்லை காவல் கோட்டம். என் அம்மாவிடம் தொலைபேசியில் ஒருநாள் பேசுகையில் சொன்னார்கள் – நீ ஒரு புக்கு வாங்கிட்டு வந்து வச்சியே. அத படிச்சு முடிச்சுட்டேன். ரொம்ப நல்லா இருக்கு என்று. என்னால் சும்மா இருக்கும் போது படிக்க முடியாத புத்தகத்தை அவ்வளவு வேலைப்பளுவுக்கு இடையே என் அம்மாவால் படிக்க முடிகிறது என்றால் அதை மீண்டும் வாசிக்க வேண்டும் என்று தோன்றியது.

பிறிதொரு நன்னாளில் அதை மீண்டும் வாசிக்க ஆரம்பித்தேன். ஆதித்தாய் சடச்சி தன் கணவன் கருப்பண்ணனின் கட்டுக்களை அவிழ்த்து விட்டு அவனை சாவுக்கு அனுப்பும் காட்சியில் மறுபடி தொடங்கியது எனது பயணம். சடச்சியின் சந்ததிகள் பெருகுவதும் பிறிதொரு காலத்தில் விஜயநகர குமாரகம்பணன் படையெடுப்பின் போது சடைச்சி மக்களை கங்காதேவி பார்ப்பதுமாய் பிரயாணிக்கிறது. இதற்கிடையே கம்பிளி ராஜ்ஜியம், விஜயநகரம் என்று ஒரு சிறு வரலாற்று பயணம்.

முதல் 200 பக்கங்கள் தடதடவென சமவெளியில் செல்லும் ரயில் போல் பிரயாணிக்கும் நாவல் அதன் பிறகு மலையேறும் ரயில் போல் மெதுவாய் செல்கிறது. மெதுவாய் செல்வதால் குறையொன்றுமில்லை. மெதுவாய் சென்றால் தானே மலையழகை ரசிக்க முடியும். அதுபோலவே கள்ளர் மக்கள் வாழ்வும் களவும் அதையொட்டிய காவலுமாய் மக்கள் வாழ்வியலுக்குள் சென்று முக்குளிக்கிறார் சு.வெ. இனவரைவியலை லாவகமாய் கையில் எடுத்து   புனைவோடு சேர்த்து கதை சொல்வது எளிதல்ல. மதுரையும் அதை சுற்றியுள்ள ஊர்களும் சந்தித்த பஞ்சங்கள், ஆங்கிலேயர் அடக்குமுறைகள், அதற்கு வந்த எதிர்ப்புகள் என்று நான்மாடக்கூடலின் வரலாற்றை கதையாய்க் கூறும் கதையிது.

ஒவ்வொரு முறை வரலாற்று நிகழ்வுகளை அந்த நாவலில் வாசிக்கும் போதும் அந்த இடத்துக்கு நம் மனம் பயணிப்பதை தவிர்க்க முடியவில்லை. பேரும் புகழும் பெற்றவர்கள் அனைவரும் சிறுபாத்திரங்களாய் தாண்டிப்போக தாதனூர்காரர்களும் பெரியாம்பளகளும் ஆங்கன்களும் ஆதிக்கம் செலுத்தும் நாவலிது.

இஸ்லாமியர் ஆட்சி போன பிறகு கங்காதேவி மீனாட்சியை மறுபடி மதுரைக்கு அழைத்து வரும் காட்சி விவரிப்பும், விஸ்வநாத நாயக்கர் கட்டிய மதுரை கோட்டையை மாரட்டும், பிளாக்பர்னும் திட்டமிட்டு பெருமாள் முதலி மூலம் இடிக்கும் வரலாறும் அந்த கோட்டை இடிபடும் போது கோட்டைக்காவல் தெய்வங்கள் இறங்கி வரும் காட்சி விவரிப்பும் உங்களை புல்லரிக்க வைக்கும்.

“சுபவேளை நெருங்கியதும் கிழக்கு மதில் மேலிருந்த நூற்றுக்கணக்கான எக்காளங்களும் கொம்புகளும் ஒருசேர முழங்கின. தாலப்பொலி வழி விரிக்க, ஆரத்திச்சுடர்கள் நிரையில் நின்றெரிய அன்னை மதுரையில் நுழைந்தாள். நகரமக்கள் கோவிலுக்கு செல்லும் இருமருங்கிலும் நின்றிருந்தனர். மீனாட்சியைக் கண்டதும் அழுகையும் புலம்பலும் வாழ்த்தொலியும் சரணவிளியுமாக மக்கள் கூட்டம் சன்னதம் கொண்டது. கண்ணீர் வெள்ளத்தில் மிதந்து மிதந்து வந்து கிழக்குக் கோபுர வாசலின் முன்னே நின்றாள். மாறவர்மன் சுந்தரபாண்டியனின் நெடுங்கோபுரம் தலை தாழ்த்தி வணங்கியது போலிருந்தது.”

தாதனூரின் ஒவ்வொரு கொத்தும் கொடிவழிகளும் வகையறாக்களும் ஏன் அந்த பெயர் பெற்றுள்ளது என்பதையும் சிறுவரலாறுகள் மூலம் விவரிக்கிறார் சு.வெ. ஒத்தப்பல்லன் வகையறா, காளை வகையறா, பனைமரத்தான் வகையறா, குருத வகையறா, காவேரி வகையறா, வல்லம் வகையறா என்று ஒவ்வொரு வகையறாவுக்கும் ஒரு கதை இருக்கிறது. அதை வரலாற்றோடு பின்னிப் பிணைத்து சொல்லும் முயற்சியில் சிறப்பாய் வெற்றி பெறுகிறார் சு.வெ. சின்னானின் ரகசியம், ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சி, மதுரையின் முதல் கச்சேரி என்று பயணிக்கும் நாவலில் குறிப்பிடத்தக்க ஒன்று சு.வெயின் எழுத்து நடை. மேலும் மதுரையில் நடந்த மிஷனரி வேலைகளை இயல்பாய் உரைத்திருப்பது சிறப்பு.

“நகரின் முதல் கச்சேரி (போலீஸ் ஸ்டேசன்) கீழமாசி வீதியில் பிளாக்பர்னின் விளக்குத்தூணுக்கு நூறு கெஜ தூரம் வடக்கே தள்ளி கட்டி முடிக்கப்பட்டது. ஒரு பகுதி போலீஸ் ஸ்டேசனுக்காகவும், ஒரு பகுதி கொத்தவால் சாவடிக்காகவும் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. மதுரையில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கட்டிடம் இதுதான். அந்த ஐரோப்பிய பாணி கட்டிடத்தில் இருந்த கவர்ச்சி, செல்வர்களை ஈர்த்தபடி இருந்தது. இரும்பு ராடர்கள் போட்டு, நிறைய ஜன்னல்கள் வைத்து காற்றோட்டமான முறையில் கட்டப்பட்டிருந்த அந்தக் கட்டிடத்தை மக்கள் தினமும் வந்து பார்த்துவிட்டுப் போயினர்.”

மதுரை நகரில் இப்போதும் இருக்கும் பல்வேறு கட்டிடங்களின் சிறப்பை, வரலாற்றை மக்களின் வாழ்வியலோடு இயைந்து சொல்லியிருப்பது சிறப்பு. களவில் இரவின் இருப்பையும், களவின் முறைகளையும், களவினால் வந்த காவல் பொறுப்பையும் சு.வெ விவரிக்கும் போது தற்போதும் அந்த நிலை இருப்பதை உணர முடிகிறது. ஆங்கிலேயர் ஆட்சி வர கள்ளர் மக்கள் படும் துயரங்களும் அவர்களை அழுத்தும் சமூக மாற்றங்களும் தெளிவாய் பதியப்பட்டு இருப்பது சிறப்பு. காவலையும் களவையும் இரு கண்களாக கொண்ட ஒரு சமூகம் எப்படி சாவுகள் தண்டனைகள் வழியே குற்றப்பரம்பரை ஆக்கப்பட்டது என்று இந்நாவலில் காணலாம்.

சில இடங்களில் நாவல் வழிமாறிப் போகிறது. தேவையற்ற தகவல்களை கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும். விவரிப்புகளை படிக்கும் போது சிறிது ஆயாசம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை, குறிப்பாய் இரவு பற்றி. அது போலவே முதல் 200 பக்கங்கள் கடும் அயர்ச்சியை உண்டு பண்ணும். 400 ஆண்டுகால சரித்திரத்தை 200 பக்கங்களில் அடைக்கும்போது உண்டாகும் அயர்ச்சி அது. ஜெயமோகன் “எழுதும் கலையில்" சொல்வது போல தேர்ந்த ஒரு செறிவூட்டலால் இந்த நாவலில் 200 பக்கங்கள் குறைத்து மேலும் அழகிய ஒரு படைப்பாய் வழங்கியிருக்கலாம்.

மேலும் வன்முறை நிறைந்த கள்ளர் வாழ்க்கை அழகியல் நோக்கோடு காட்டப்[பட்டிருப்பதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். களவை நியாயப்படுத்துதல் சரிதான்.. ஆனால் இடம் பொருள் ஏவல் பார்த்து செய்வதுதானே களவு. தாது வருஷ பஞ்சத்தில் களவு செய்வதை, காவக்கூலி வாங்கிக்கொண்டு பதுக்குவதற்கு துணைபோதலை  காவியப்படுத்துதல் சரியல்ல என்பது என் கருத்து.

இத்தகைய குறைகள் இருப்பினும் சு.வெ மீது என்னால் எந்த பெருங்குற்றமும் சாட்ட முடியாது. வரலாறு பிடிக்கும் ஒவ்வொருவரும் படித்தாக வேண்டிய நூல் இது. இதை மட்டும் படிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. இதையும் படிக்க வேண்டும் என்று தான் சொல்கிறேன். பலமுறை படித்தவன் என்ற முறையில் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஏதேனும் புதிய தகவலோ வரலாற்று உண்மையோ எனக்கு தெரிய வருகிறது. படித்து முடித்த பின் மலைப்பும் பிரமிப்புமே மிஞ்சுகிறது. பத்தாண்டு கால உழைப்பு என்று சொல்லும்போதில் அதில் எனக்கேதும் ஐயமில்லை.

நூல்: காவல் கோட்டம்

வெளியீடு: தமிழினி

விலை: ரூ.650

ஆசிரியர்: சு.வெங்கடேசன்.

கிடைக்குமிடம்: டிஸ்கவரி புக் பேலஸ்

பொற்றாமரை – நூல் அறிமுகம்

இந்த பதிவு கும்பகோணத்தில் இருந்து வரும் அக்டோபர் மாத சஞ்சிகை சிற்றிதழில் வெளியிடப்பட்டது. சஞ்சிகை வலைப்பதிவிலும் வெளியிடப்பட்டது.

மதுரை தொன்மை நிறைந்த ஒரு ஊர் என்பது அனைவரும் அறிந்ததே. மதுரையின் தொன்மைக்கு பெரும் அடையாளமாய் விளங்குவது ஊரின் மத்தியில் உயர்ந்து நிற்கும் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலே. கடவுள் மீது நம்பிக்கை இல்லாத என் போன்றோரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கும் வண்ணம் உயர்ந்து நின்று இந்த ஊரின் வளர்ச்சிக்கு அரும்பங்காற்றிவரும் அக்கோயில் சிறப்பை தெளிவாய் எடுத்துரைக்க ஒரு நன்னூல் இல்லையே என்ற நிலையை உடைத்தெறிய உருவாக்கப்பட்ட படைப்பே பொற்றாமரை.

03-rajanna-potramarai-photo-1

முனைவர் அம்பை.மணிவண்ணன் தேனி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர். மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற அவர் தற்போது மேலூர் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை உதவி பேராசிரியராய் பணியாற்றி வருகிறார். பல்வேறு நூல்களை அவர் எழுதியிருந்தாலும் அவரது ஆகச்சிறந்த படைப்பு பொற்றாமரை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

மதுரையின் வரலாற்றை மேம்போக்காய் விவரிக்கத் தொடங்கும் இந்நூல் மெதுவாய் நம்மை அதனோடே ஒரு காலப்பிரயாணத்திற்கு அழைத்துச் செல்கிறது. திருக்கோவில் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் மதுரைக் கோவிலின் தலவரலாற்றை உரைக்கும் நூல் அதன் பிறகு கோவிலுக்குள் நம்மை ஒரு வழிகாட்டி ஊரை சுற்றிக்காட்டுவது போல் கை பிடித்து அழைத்துச் செல்கிறது.

நுழைவுவாயில், அட்டசக்தி மண்டபம், வேடமண்டபம் என்று ஒவ்வொரு பகுதியாய் நாம் பார்த்துச்செல்ல அதனூடே வரலாற்றுத்தகவல்களையும் புராணக்கதைகளையும் வழங்கியிருப்பது சிறப்பு. கதை படிப்பது போல் வரலாறு படிப்பது எளிது. ஒவ்வொரு மண்டபத்தில் உள்ள சிற்பங்கள், அதை கட்டியது யார் என்ற தகவல்கள், சிற்பங்களின் சிறப்புகள், சிற்பங்களின் பெயர்கள், அவற்றை தெளிவாய் காட்டும் வண்ண புகைப்படங்கள் என இந்நூல் நம்மை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச்செல்கிறது.

அதேபோல் சிற்பக்கலை குறித்த தகவல்கள் ஆச்சயமூட்டுகின்றன. இதுகாறும் நான் அறியாத பல தகவல்களை இந்நூல் வழியே நான் அறிந்தேன். உதாரணம் வேடமண்டபத்தில் காணப்படும் வேட்டுவச்சி மற்றும் வேடன் சிற்பங்கள் கடவுளர்களுடையது என்பதை விளக்கும் போது:

“இவ்வேட்டுவச்சியும் வேடனும் உமையும் சிவனுமாகும். வேட்டுவச்சியின் கைகளில் சூலாயுதம் மற்றும் கபாலம் காணப்படுகின்றன. மார்பில் கச்சை காட்டப்பட்டுள்ளமை, இச்சிற்பம் இறைவிதான் என்பதை உணர்த்துவதாக உள்ளது. பெண் உருவங்களைச் சிற்பங்களில் காட்டும்பொழுது தேவலோகப்பெண்கள் எனில் அவர்களுக்கு மார்பில் கச்சை இடம் பெறும்.”

இத்தகவலை நான் இதற்கு முன் அறிந்திலன்.

அதேபோல் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தை சுற்றிச் செல்லும் பாதையில் நூலும் பயணிக்கிறது. இக்கோவில் பற்றிய எனது பார்வையை இந்த நூல் கண்டிப்பாய் மாற்றியது. ஏதோ ஒரு சிற்பம் என்று இத்தனை நாள் தாண்டிச்சென்ற என்னை ஆகா! இது வேட மண்டபம். இதில் இருக்கும் மோகினி சிற்பம் இதுதான் என்று நின்று பார்க்க வைத்தது.

மிகச்சிறப்பாய் இந்நூலை வழங்கியுள்ள பேராசிரியர் அம்பை.மணிவண்ணனுக்கும், இதைப்பதிப்பித்த ஏ.ஆர். பதிப்பகத்துக்கும் எனது வாழ்த்துக்கள். வண்ணமயமான புகைப்படங்களை இந்நூலிற்காய் வழங்கிய ஒளிப்பட கலைஞர்கள் திருநாவுக்கரசிற்கும், தென்னகக்கண்ணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். மேலும் முனைவருடன் நான் பேசிய பொழுது இந்த புத்தகத்தின் மறுபதிப்பு கூடிய சீக்கிரம் வெளி வரும் என்றும் மேலும் ஒரு மலிவு விலை பதிப்பு ஒன்றும் வெளியிட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார்.

மலிவு விலை பதிப்பு வராவிட்டாலும் கோவில்களை, சிற்பங்களை, தமிழ்க் கலைகளை, தமிழர் வரலாற்றை நேசிக்கும் அனைவரும் தங்கள் வீட்டில் வாங்கி வைக்கவேண்டிய நூலாகவே இதை நான் கருதுகிறேன். மதுரையை நேசிக்கும் அனைவர் கையிலும் தவழ வேண்டிய நூல் இது.

நூல் பெயர்: பொற்றாமரை

ஆசிரியர்: முனைவர் அம்பை.மணிவண்ணன்

விலை: ரூ. 955

பதிப்பகம்: ஏ.ஆர். பதிப்பகம்

பசுமை நடை 25 – விருட்சத் திருவிழா.

பசுமை நடை – அ.முத்துகிருஷ்ணன் என்னும் விதையில் ஆரம்பித்து இன்று விருட்சமாய் வளர்ந்து நிற்கும் அமைப்பு. பண்டைய தமிழ் கோவில்கள், சமணர் கோவில்கள், சமணர் குகைகள் என்று பயணித்து வரலாற்றை மீட்டுக் கொண்டு வர முயலும், அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுக்கொண்டிருக்கும் அமைப்பு.

24 பசுமை நடைகள் முடிந்த நிலையில் 25ஆம் பசுமை நடையை ஒரு பெருவிருட்சத்தின் நிழலில் ஊர் கொண்டாடும் ஒரு திருவிழாவாய் நடத்த திட்டமிட்டோம். அதற்காய் தேதி ஒன்றும் குறிக்கப்பட்டது. குறிப்பை உணர்த்தும் வகையில் ஆகஸ்டு திங்கள் 25ஆம் நாள் இந்த திருவிழா நடைபெறும் என்று அறிவித்தார் முத்துகிருஷ்ணன்.

அதே நாளில் இதுவரை சென்ற பசுமை நடை பயணங்களை தொகுத்து ஒரு வரலாற்று ஆவணமாய் வெளியிட வேண்டும் என்றும் அறிவித்தார். பசுமை நடை உறுப்பினர்கள் மற்றும் மதுரை மக்கள் குடும்பத்தோடு கூடிக்கொண்டாடும் திருவிழாவாய் இதை நிகழ்த்திக் காட்ட பசுமை நடை நண்பர்கள் எடுத்த முயற்சி சிறிதொன்றும் அல்ல. அவர்களுக்கு முதற்கண் என் வாழ்த்துக்கள்.

ஆகஸ்டு திங்கள் 23ஆம் முதல் சந்திப்பு அதே கீழக்குயில்குடி சமணமலை அடிவாரத்தில் நிகழ்ந்தது. விருட்சத்திருவிழாவின் பொறுப்புகள் பகிர்தளிக்கப்பட்டது. மேலும் அமெரிக்கன் கல்லூரி, லேடி டோக் கல்லூரிகளில் இருந்து மாணவர் படை ஒன்றும் நிகழ்வை நடத்த உதவி செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

வந்தது ஆகஸ்டு திங்கள் 25ஆம் நாள். அதிகாலை துயில் எழுந்து குளித்து முடித்து தயாரானேன். என் மருத்துவமனையில் பகுதி நேரமாய் வேலை செய்யும் மோகன் தானும் வரவேண்டும் என்று பிரியப்பட்டதால், அவனையும் அழைத்துக் கொண்டு கிளம்பினேன். அச்சம்பத்து தாண்டி வண்டியில் சென்று கொண்டிருக்கும் போதே நண்பர்கள் விஷ்ணு மற்றும் ராஜேஷை சந்தித்துவிட்டேன்.

சமண மலை அடிவாரத்தை அடைந்ததும் பசுமை நடை செய்திருந்த ஏற்பாடு என்னை ஆச்சர்யப்படுத்தியது. வெயில் மக்களை பாதிக்காமல் இருக்க ஷாமியானா தடுப்பு, மக்கள் தரையில் அமர கார்பெட் விரிப்பு என்று அனைத்தையும் யோசித்து செய்திருந்தனர்.

IMG_0224

மிகவும் முக்கியமான விஷயம் – பெண்கள் அதிகம் வருவார்கள் என்பதால் அவர்கள் நிலையையும் யோசித்து மதுரை மாநகராட்சியில் இருந்து ஒரு நடமாடும் கழிப்பறையையும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

1176353_681251388570961_2141823564_n

விழா தொடங்கும் முன் செட்டிபுடவு வரை ஒரு சிறு நடை சென்றனர். அய்யா சாந்தலிங்கம் அங்கு சென்று வரலாறு சொல்லும் உண்மைகளை ஆர்வலர்களுக்கு எடுத்துரைத்தார். நானும் சில நண்பர்களும் தொலைதொடர்பு சம்பந்தமான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டதால் அதில் பங்குகொள்ள இயலவில்லை.

Santhalingam sir settipudavu

செட்டிப்புடவு சென்று திரும்பி வந்த அனைவருக்கும் காலை உணவு தயாராகி காத்திருந்தது. இயற்கை உணவிற்கான மூலப் பொருட்களை தேடிச் சென்று வாங்கி வந்து அதை அங்கேயே சமைத்து பரிமாறினர். காலை உணவாய் சர்க்கரை பொங்கல் (அக்கர அடிசில்) மற்றும் வெண்பொங்கல் பரிமாறப்பட்டது. சாம்பாரும் மிளகாய் தூக்கலான தேங்காய் சட்னியும் தொட்டுக்கொள்ள.

உணவருந்திய பின் நண்பர்கள் அனைவரும் சென்று ஆலமரத்தின் கீழ் அமர, நிகழ்வு இனிதே துவங்கியது. முத்துகிருஷ்ணன் மற்றும் சில பசுமை நடை நண்பர்கள் பேசிய பின், அய்யா சாந்தலிங்கம் பேசினார். பல முறை கேட்டது என்றாலும் மறுபடி மறுபடி கேட்கத்தூண்டும் பேச்சு அவருடையது.

Santhalingam

IMG_0105

பிறகு அய்யா தொ.பரமசிவம் பேச ஆரம்பித்தார். சமணம் பற்றிய அவரது பார்வை மிகவும் வித்தியாசமானது. சமணம் ஒரு மதம் என்று நினைப்போர் பலருக்கும் அது ஒரு மதமல்ல, வாழ்வியல் நெறி என்று தெளிவாய் எடுத்துரைத்தார். அய்யாவின் பேச்சின் வீடியோ பதிவுகள் கிடைத்ததும் அதை இங்கே பகிர்கிறேன்.

IMG_0132

அதன் பிறகு அய்யா மஹ்மூத், தமிழிசை அறிஞர் முத்தையா, பேராசிரியர் கண்ணன், மதுரை காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் இ.கா.ப, பத்திரிக்கையாளர்கள் கவின் மலர், சுகிதா, கவிஞர் குட்டிரேவதி, பேராசிரியர் சுந்தர்காளி, பூவுலகின் நண்பர்கள் ஆர்.ஆர்.ஸ்ரீநிவாசன், கீழக்குயில்குடி ஊராட்சி மன்ற தலைவர், மற்றும் வந்தவாசியில் இருந்து வந்த சமணரான ஆனந்தராஜன் ஆகியோர் பேச விழா இனிதே நடந்தது. புகைப்படங்கள் கீழே.

IMG_0163

திரு.பாலகிருஷ்ணன், இ.கா.ப. அவர்கள்

Muthaiah

அய்யா முத்தையா அவர்கள். இடதுபுறம் அமர்ந்திருப்பவர் அய்யா மஹ்மூத் அவர்கள்.

sundarkali

பேராசிரியர் சுந்தர்காளி அவர்கள்.

anandharajan

அய்யா ஆனந்தராஜன் அவர்கள்.

IMG_0119

பேராசிரியர் கண்ணன் அவர்கள்.

இந்த உரைகளுக்கு இடையே நடந்த இன்னும் சில விஷயங்கள் கீழே:

“மதுர வரலாறு – சமண பெருவெளியின் ஊடே” என்னும் தலைப்பில் நூல் வெளியீடு நடந்தது. இந்த நூலை தொ.ப அய்யா வெளியிட சமண மலை அடிவாரத்தில் பருத்திப்பால் விற்கும் ஜெயமணி அம்மா பெற்றுக்கொண்டார்.

1184907_681257501903683_952403765_n

1236351_662090893819393_146591836_n

பசுமை நடை அமைப்பிற்கான புதிய இலச்சினையை காவல்துறை ஆணையாளர் திரு.பாலகிருஷ்ணன் வெளியிட திரு.மஹ்மூத் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

IMG_0151

பசுமை நடை ஓவியங்களை திரு.ரவி வெளியிட புகைப்பட கலைஞர் ஸ்ரீராம் ஜனக் பெற்றுக்கொண்டார்.

1240232_662091623819320_1717071973_n

இன்னொருபுறம் குழந்தைகளுக்கான முகாம் ஒன்றும் நடைபெற்றது. 168 குழந்தைகள் பங்கேற்ற இந்த நிகழ்வை சிறப்பாய் நடத்திய பசுமை நடை ஆர்வலர்களுக்கு எனது வாழ்த்துக்கள். மேலும், குழந்தைகளை ஊக்குவிக்க ஒரு சான்றிதழும் விளையாட்டு சாமான்கள் அடங்கிய ஒரு பையும் வழங்கப்பட்டது சிறப்பு. விளையாட்டுகள் அனைத்தும் பண்டைய தமிழ் விளையாட்டுகளாய் (கிட்டிப்புள், பம்பரம் போன்றவை) இருந்தது தனிச்சிறப்பு.

கீழே சில புகைப்படங்கள்:

IMG_0082

IMG_0086

IMG_0100

குழந்தைகள் செய்து வைத்த களிமண் பொம்மைகள்:

IMG_0232

சான்றிதழில் கையொப்பமிடும் சாந்தலிங்கம் அய்யா.

IMG_0174

நிகழ்வுகள் முடிந்த பின் மதிய உணவை அருமையான சாம்பார் சாதம், தயிர் சாதம், கூட்டு, அப்பளம் வழங்கப்பட்டது. உணவு அருந்திய பின் ஒவ்வொருவராய் கிளம்பிச்செல்ல பசுமை நடை உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து அந்த இடத்தில் சேர்ந்திருந்த குப்பைகளை எடுத்து மாநகராட்சி கழிவு சேகரிப்பு வாகனத்தில் சேர்த்தோம். பருத்திப்பால் அருந்திக்கொண்டே ஆல் நிழலில் அமர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் பேசி பிரிய மனமின்றி பிரிந்தோம்.

இந்த முறை மிகவும் சிறப்பாய் அமைந்தன சந்திப்புகள். தொ.பரமசிவம் அய்யாவை சந்தித்தது மகிழ்ச்சி. மேலும் ஆத்மார்த்தி அண்ணன், தோழி தீபா நாகராணி, நண்பர் கடங்கநேரியான், நண்பன் முத்துக்குமரன், தோழிகள் கவின் மலர், சுகிதா, மற்றும் குட்டி ரேவதி, சித்திரவீதிக்காரன் சுந்தர் என்று மனதுக்கு இனிமையான சந்திப்புகள்.

முத்துகிருஷ்ணன் இட்ட விதை இன்று மரமாய் எழுந்து நிற்கிறது. அது தோப்பாகி வனமாகி மக்கள் வாழ்வை வளமாக்க வாழ்த்துக்கள்.

மேலும் புகைப்படங்களின் தொகுப்பு இங்கே – ராஜண்ணா, செல்வம் ராமசாமி.

Smile

சென்னை – வரலாற்றின் உள்ளே

சென்னை. பெயரை கேட்டவுடனே நினைவுக்கு வருவது வெயில். ஒரு காலத்தில் சுற்றிலும் மரங்களோடு நதிகள் சூழ்ந்த கிராமமாய் இருந்த சென்னை இன்று அந்த அடையாளத்தை தொலைத்து நிற்கிறது. சென்னையின் வரலாற்றை தேடிப் படிக்கும் எனக்கு இந்த நாளில் அதை பிறரோடும் பகிரத் தோன்றியது.

ஆங்கிலத்தில் எளிதாய் எழுதி விட்டேன் (Copy paste). சுட்டி இங்கே – Chennai Day – A journey into the history.

இதை தமிழாக்கம் செய்வது சுலபமில்லையே. ஆயினும் ஒரு சிறு சுருக்கமான முயற்சி. Smile

About the origins of Madras:

சென்னையின் ஸ்தல வரலாறு:

திரு.பிரான்சிஸ் டே தான் சென்னை உருவாக இருந்த காரணகர்த்தா. அவர் வந்து சேர்ந்த போது திருவல்லிக்கேணி நதி என்று அழைக்கப்பட்ட கூவம் நதி படகு போக்குவரத்துக்கு ஏதுவாய் இருந்தது. மழைக்காலத்தில் அதைப் பார்த்த டே அது எப்போதும் தண்ணீரோடு இருக்கும் என்று நம்பி ஏமாந்து போனதில் வியப்பில்லை. சந்திரகிரி நாயக்க மன்னரோடு அவர் மேற்கொண்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்தது. காட்பாடியில் இருந்து குடுர் வரை செல்லும் ரயில் பாதையில் வரும் சந்திரகிரி ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு கல் தொலைவில் இருந்த ராஜாமகாலில் இந்த மன்னர் டேவிற்கு சென்னையை தாரை வார்த்தார்.

புனித ஜார்ஜ் கோட்டை:

ஆரம்ப காலத்தில் இருந்தே இந்த கட்டிடம் புனித ஜார்ஜ் கோட்டை என்றே அழைக்கப்பட்டு வந்தாலும், கோட்டை சுவர் உருவானது பல ஆண்டுகள் கழித்துத்தான். மைசூர் வீரர்கள் தாக்குதலுக்கு பயந்தே பீரங்கிகள் வைக்கப்பட்டு கோட்டை சுவர் பிற்காலத்தில் எழுப்பப்பட்டது.

1746ல் பிரெஞ்சு படையின் தாக்குதலுக்கு பின், ஆங்கிலேயர்கள் அனைவரும் புதுச்சேரியில் சிறை வைக்கப்பட்டனர். சென்னையில் பிரெஞ்சுக் கொடி பறந்தது. போரின் பின்னான சமாதான உடன்படிக்கையில் சென்னை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தது. பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து மற்றொரு பிரெஞ்சு தாக்குதல் வெற்றிகரமாய் முறியடிக்கப்பட்டது.

மிகவும் சிறியதாய் இருந்த புனித ஜார்ஜ் கோட்டை, அதை சுற்றியுள்ள வொயிட் டவுன் பெரிதானதால், நிஜமான கோட்டையாக மாற்றப்பட்டது. முதலில் கட்டப்பட்ட சிறிய கோட்டை சுவர் இடிக்கப்பட்டது.

வொயிட் டவுன், ப்ளாக் டவுன், ஆர்மீனியன் தெரு:

புனித ஜார்ஜ் கோட்டைக்கு வெளியே உருவான இரு துணையிடங்கள் வொயிட் டவுன் என்றும் பிளாக் டவுன் என்றும் அழைக்கப்பட்டன. தற்போதைய ஜார்ஜ் கோட்டையின் எல்லைகள் தான் அந்த காலத்தில் வொயிட் டவுனின் எல்லையாய் இருந்தன. நீதிமன்றம், சட்டக்கல்லூரி, மற்றும் இவற்றின் இடையே இருக்கும் காலி இடம் – இவை மூன்றும் சேர்ந்து தான் பிளாக் டவுன் என்று அழைக்கப்பட்டது. வொயிட் டவுன் கிறிஸ்டியன் டவுன் என்றும் அழைக்கப்பட்டது. வொயிட் டவுனின் பிரதானமாய் ஆங்கிலேயர், போர்த்துகீசியர், மற்றும் ஐரோப்பியர்கள் வசித்தனர். ப்ளாக் டவுனில் பெரும்பான்மை மக்கள் தெலுகு மக்களாய் இருந்தனர்.

ஆர்மீனியரை புதைக்கும் இடமே இப்போது ஆர்மீனியன் தெரு என்று அழைக்கப்படுகிறது. வியாபாரத்தில் சிறந்து விளங்கிய ஆர்மீனியர்கள் ஆங்கிலேயர் வருகைக்கு முன்னரே சென்னையில் தங்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தனர். பீட்டர் அஸ்கான் என்ற ஆர்மீனிய வணிகர் நாற்பதாண்டு காலம் சென்னையில் தங்கி 1751ல் மரணமடைந்தார். இவர்தான் சைதாப்பேட்டையில் மார்மலாங் பாலத்தையும் புனித தோமையர் மலையில் மேலே செல்லும் படிக்கட்டுகளையும் கட்டியவர். இவரது கல்லறையை இன்றும் வேப்பேரியில் உள்ள புனித மத்தியாஸ் தேவாலயத்தில் காணலாம்.

பி.கு: மார்மலாங் பாலம் எதுவென்று யோசிக்கிறீர்களா? இன்று மறைமலை அடிகள் பாலம் என்று அழைக்கப்படும் அடையாற்றின் வடக்கு கரையை தென்கரையோடு இணைக்கிறது. அதில் உள்ள கல்வெட்டில் பீட்டர் அஸ்கானின் பெயரை காணலாம்.

வால்டாக்ஸ் ரோடும் சால்ட் கொட்டாயும்:

சென்னையை பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து மீட்ட பிறகு, பிளாக் டவுனின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழும்பியது. ஆங்கிலேயர் பிளாக் டவுனின் பாதுகாப்பிற்கு சுவர் அமைக்க வேண்டும் என்றும் அதற்கான செலவை பிளாக் டவுன்வாசிகளே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்தனர். ஆகையால் அதற்கு ஒரு அலுவலகம் அமைத்து சுவர் வரியாக பணம் வசூலிக்கப்பட்டது. அந்த தெருவே இன்று வால்டாக்ஸ் ரோடு என்று அழைக்கப்படுகிறது. இது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சால்ட் கோட்டார் வரை நீண்டிருந்தது. சால்ட்கொட்டாய் என்னும் பெயர் காரணத்தை ஜாக்கி சேகர் அவரது பதிவில் அருமையாய் விளக்கி இருக்கிறார். எனக்கு கொஞ்சம் வேலை மிச்சம்.

மேலே படிக்க – சால்ட் கோட்டர்ஸ்.

எலிகு யேல், காலடிபேட்டை, சிந்தாதிரிபேட்டை, நைனியப்ப நாயக்கன் தெரு:

ஜார்ஜ் கோட்டையில் கவர்னராய் இருந்த எலிகு யேல் நெசவாளர் குடும்பங்களை அழைத்து வந்து வீவர்ஸ் தெருவில் தங்க வைத்தார். இந்த தெருவே இன்று நைனியப்ப நாயக்கன் தெரு என்று அழைக்கப்படுகிறது. இருபத்து ஐந்து ஆண்டுகள் கழித்து கவர்னர் காலட் மேலும் சில நெசவாளர்களை அழைத்து வந்து திருவொற்றியூருக்கு அருகே தங்க வைத்தார். அவர் பெயருடன் காலட் பேட்டை என்று வழங்கி வந்த இடம் சற்றே மருவி இன்று காலடிப்பேட்டை என்று வழங்குகிறது. மேலும் தேவை ஏற்பட்டதால் நெசவாளர்களை அழைத்து வந்து வீவர்ஸ் காலனி ஒன்று உருவாக்கப்பட்டது. அதுவே இன்று சிந்தாதிரிபேட்டை என்று விளங்குகிறது.

வண்ணாரப்பேட்டை:

துணி துவைப்பவர்கள் அதிகம் இருந்ததால் அது வாஷர்மேன் பேட்டை என்று அழைக்கப்படவில்லை. ஆங்கிலேயர் அகராதியில் வாஷர்மேன் என்றால் துணிகளுக்கு வெண்மையிடுபவர் என்று ஒரு பொருள் வரும். அதனாலே இதை அவ்வாறு அழைத்தனர்.

போதுமென்று நினைக்கிறேன். இதற்கு மேல் மொழிபெயர்க்க நேரமில்லை. அதைவிட முக்கியமாய் எனக்கு அவ்வளவு பொறுமையோ புலமையோ இல்லை. Smile

நேரமிருந்தால் படியுங்கள். க்ளின் பார்லோ எழுதிய “The Story of Madras.”

இனிய சென்னை தின வாழ்த்துக்கள்.

ஆன்ட்ராய்டில் தமிழ் EPUB படிக்க…

வணக்கம். நான் திசம்பர் திங்கள் கூகிளின் நெக்சஸ் 7 வாங்கினேன். வாங்கிய பின் EPUB என்ற மாய உலகிற்குள் பிரவேசித்தேன். EPUB என்பது International Digital Publishing Forum (IDPF) என்ற குழுமம் உருவாக்கிய மின்புத்தக வடிவமாகும்.

சரி. PDF உள்ளதே!! இது எதற்கு புதிதாக என்னும் கேள்வி எழலாம். விக்கிபீடியா இப்படி சொல்கிறது – Because the format is designed to reproduce page images, the text traditionally could not be re-flowed to fit the screen width or size. As a result, PDF files designed for printing on standard paper sizes were less easily viewed on screens with limited size or resolution, such as those found on mobile phones and e-book readers. Adobe has addressed this drawback by adding a reflow facility to its Acrobat Reader software.

என்னை பொறுத்தவரையில் PDF வடிவென்பது அதிக அளவை கொண்டது. நல்ல தரம் உடையது. ஆயினும் சிறு தொடுதிரை கணினியில் வாசிக்க மிகவும் சிரமமாக இருந்தது. அப்போது தான் EPUB என்னும் வகை என் கண்ணில் பட்டது.

சில ஆங்கில புத்தகங்களை பதிவிறக்கி வாசித்து பார்த்தேன். அந்த அனுபவம் அலாதியானது. நமக்கு தேவையான அளவு எழுத்துக்களை பெரிதாக்கவோ சிறிதாக்கவோ முடிந்தது. அளவும் குறைவானதே. நான்கு PDF சேமிக்கும் இடத்தில் நாற்பது EPUB சேமித்து விடலாம். பிறகு தமிழ் புத்தகங்கள் ஏதேனும் EPUB வடிவில் கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்தேன். Project Madurai வலைத்தளத்தில் சில புத்தகங்கள் கிடைத்தன. அவற்றை என் நெக்சஸ் 7ல் போட்டு படிக்க முயற்சித்தேன். அனைத்து எழுத்துக்களும் கட்டம் கட்டமாய் தெரிந்தன.

சிறிது நேர தேடலுக்கு பின் Moon+ reader என்ற மென்பொருள் மூலம் அவற்றை படிக்க முடியும் என்று அதையும் முயற்சித்தேன். Moon+ Reader மூலம் தமிழ் புத்தகங்களை திறந்து தமிழ் எழுத்துக்களை வாசிக்க முடிந்தது. ஆனாலும் திருப்திகரமாய் இல்லை. மேலும் தேடிய பின், Aldiko Reader மூலம் புத்தகங்களுக்கு தனிப்பயன் எழுத்துரு வகைகளை தரவிறக்கம் செய்து வாசிக்க முடியும் என்று தெரிந்தது.  (இங்கே சுட்டுக)

ஆயினும் அந்த எழுத்துக்கள் சரியானபடி தெரியவில்லை. பிறகு தமிழ் மின்னூல் ஒன்றை MS Wordல் தட்டச்சு செய்து  Unicode எழுத்துரு கொண்டு அதை HTMLஆக மாற்றினேன். இந்த HTMLஐ மறுபடி Calibre என்ற மின்பொருள் கொண்டு EPUB வடிவுக்கு மாற்றினேன். எந்த எழுத்துரு கொண்டு MS WORDல் தட்டச்சு செய்தேனோ, அதே எழுத்துருவை Aldiko எழுத்துரு கோப்புக்குள் சேமித்தேன்.

இப்போது படிக்க முடிகிறது தமிழை தமிழாய்.

இன்னொரு சிக்கல். அனைத்து தமிழ் நூல்களும் PDF வடிவத்தில் தான் இணையத்தில் கிடைக்கின்றன. TRUE TYPE PDF என்றால் எழுத்துருக்களை MS WORDல் பதிவு செய்ய முடியும். ஆனால் வருடிய படங்களுடைய PDF (Scanned pages) இருந்தால் அவற்றை அப்படியே EPUBஆக மாற்ற இயலவில்லை. எழுத்துருவை தரவிறக்க OCR என்ற MS WORD Add-on இருந்தாலும் கூட அது சரியாக பணி செய்யவில்லை. தற்போதுள்ள நிலையில் அனைத்து நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் நூல்களையும் EPUB முறைக்கு மாற்ற கடும் உழைப்பு தேவைப்படுகிறது. உதவுவோர் உதவலாம்.

முனைத்தோல் வெட்டு

பேச அசூயைப்படும் ஒரு தலைப்பை விளம்பரம் வேண்டி தேர்ந்தெடுத்த எனது மூளைக்கு ஒவ்வொரு நாளும் உண்ண வேறு வேறு புத்தகங்கள் தேவைப்படும். ஒரு நாள் உணவை நான் தராவிடில் மூளை எனது மனதை மயக்கி என் கைகளையும் கண்களையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்து, அதன் உணவை பறித்து உண்ணும்.

அப்படிப்பட்ட ஒரு நாளில் நான் வாசிக்க நேர்ந்த புத்தகம் தான் இது. புத்தகத்தின் தமிழாக்கப்பட்ட தலைப்பு இதுவே – “பூள் முனைத்தோல் வெட்டு – உலகின் மிக சர்ச்சைக்குரிய அறுவை சிகிச்சையின் வரலாறு.” பூள் என்பது அசூயை கொள்ள வேண்டிய ஒரு வார்த்தை அல்லவே. அது ஆணின் உடலில் இருக்கும் ஒரு பகுதி. மேல சொல்லவேண்டுமென்றால் மனித இனத்தின் இருப்பை உறுதி செய்ய பயன்படும் ஒரு கருவி எனக்கொள்ளலாம்.

ஆதி காலம் தொட்டே, பல்வேறு சமநிலைக் கலாச்சாரங்களில் இந்த முனைவெட்டு முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆதி காலத்தில், மதமும் மருத்துவமும் அறிவியலின் பாற்பட்டு விலகி வெவ்வேறு துறைகளாகும் முன்னமே, இந்த பழக்கம் இக்கலாசாரங்களில் விளங்கி வந்துள்ளது. முதன்முதல் முனைவெட்டின் ஆதாரம் ஒரு எகிப்திய கல்லறையின் மேல் வரையப்பட்ட ஒரு ஓவியமே. சக்காராவின் பெரும் இடுகாட்டில் உள்ள அன்க்மகோரின் கல்லறையின் மேல் வரையப்பட்ட பல்வேறு ஓவியங்களின் மத்தியில் காணப்படும் ஒரு ஓவியத்தில் இரு பூசாரிகள் இரு இளைஞர்களின் பிறப்புறுப்பை வெட்டும் காட்சி விளக்கப்பட்டுள்ளது.

image

கி.மு. 23ஆம் நூற்றாண்டில் யுஹா என்பவர் எழுதிய கூட்டு முனைவெட்டு குறித்த ஒரு அறிக்கையும் இதை உறுதி செய்கிறது. முனைவெட்டை பற்றி முப்பது பதிவுகள் போட்டு அதை விளம்பரம் செய்து புகழ் தேடும் அளவுக்கு என் மூளையின் வீச்சு மங்கி விடவில்லை. அனைவரும் போய் அந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள். படிக்க பிடிக்காவிட்டால், படியுங்கள். அப்போது தான் அறிவு வளராவிட்டாலும் வரலாறாவது ஆகும்.

270 பக்கங்கள் கொண்ட இந்த நூலினை அனைவரும் படிக்க முடியா. மனித இனத்தின் பரிமாண வளர்ச்சியை அறியும் ஆவல் கொண்டோர் மட்டுமே படிக்க வேண்டிய நூல் இது. பிறரிடம் தம் அறிவை காட்டி மெச்சி கொள்ள நினைத்து சீன் போடும் என்னைப் போன்ற சிலரும் படிக்கலாம்.

என்னுடையதை மூடும் முன், உங்களுக்கு ஒரு தகவல். பெண்களுக்கும் முனைவெட்டு உண்டு வரலாறில். 1994லில் டோகோ என்ற நாட்டிலிருந்து பாவ்ஜியா கசின்ட்ஜா என்ற பெண் அமெரிக்காவிற்கு போலி கடவுச்சீட்டில் வந்தாள். அகதியாக வேண்டி விண்ணப்பித்த அவள் தெரிவித்த காரணம்: அவள் மீண்டும் அவளது நாட்டிற்கு சென்றால் அவளுக்கு அவளது பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்து அவளை ஏற்கனவே மணமாகி மூன்று மனைவிகளையுடைய வயதான ஒருவனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். கசின்ட்ஜாவுக்கு நியாயம் கிடைக்க நேரமானது. ஆனால் அவள் மூலமாகவும், அவளுக்கு ஆதரவாகவும் பலர் வெளியே வந்தனர். அப்படி வெளியே வந்தவர் தான் வாரிஸ் டிரி. “பாலைவன மலர்கள்" என்ற பெயரில் இவர் எழுதி வெளியிட்ட நூல் பேரும் பரபரப்பை கிளப்பியது. 1999ல் பிரெஞ்சு நீதிமன்றம் ஒரு ஆப்பிரிக்க பெண்ணுக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அந்த பெண் செய்த குற்றம்: பத்து வயதிற்குட்பட்ட 48 பெண்களுக்கு அவர்களின் பிறப்புறுப்புகளை வெட்டியது.

மேலும் சொல்லிக்கொண்டே போகலாம். படியுங்கள். புத்தகத்தின் ஆங்கில தலைப்பு – Circumcision – A history of the World’s most controversial surgery.

மின்புத்தகம் வேண்டுமேன்போர் கூகிளில் தேடி கண்டு கொள்ளலாம். இருக்கிறது என்பது மட்டுமே நான் சொல்லும் தகவல்.

உண்ணற்க கள்ளை – நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடனை நான் வாசித்ததில்லை. நாஞ்சில் வட்டார சொல் அகராதி மட்டும் வாங்கினேன் படிக்க. ஆனால் அதை பயன்படுத்தும் நிலை இன்று வரை எனக்கு நேரவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன் என் தங்கையின் நண்பன் முத்துவேல் எனது வீட்டிற்கு என்னை சந்திக்க வந்திருந்தான். பேசிக் கொண்டு இருக்கையில் கள் பற்றி பேச்சு வந்தது.

கள் பற்றி நாஞ்சில் நாடன் சில அருமையான கட்டுரைகள் எழுதி உள்ளதாக என்னிடம் கூறினான். அதில் ஒன்றை வாசித்தும் காண்பித்தான். அதுவே நீங்கள் கீழ்க்காணும் கட்டுரை.

அவன் வாசித்த விதமும், நாஞ்சில் நாடனின் எழுத்து நடையும் என்னை மெய்மறக்கச் செய்தது. சொற்றொடர்களின் வலிமையையும் ஞா.ஞாவின் அர்த்தமுள்ள கேள்விகளும் என்னை முழுமையாகக் கவர்ந்தது. அந்த காரணங்களினாலேயே இதை இங்கு பகிர்கிறேன்.

கள் பற்றி நான் கொண்டிருந்த கருத்தை மேலும் சீர்படுத்தும் வகையில் எழுப்பப்பட்ட கேள்விகளால், நான் திகைத்துப்போய் நிற்கிறேன். படித்து ரசித்ததை பகிராத பாவி என இனி என்னை பழிக்க முடியாது.

கள் ஆதித்தமிழரின் பானம். நினைவில் வைத்திருப்போம் என்றும். இனி படித்து ரசியுங்கள்.

உண்ணற்க கள்ளை 1உண்ணற்க கள்ளை 2உண்ணற்க கள்ளை 3உண்ணற்க கள்ளை 4உண்ணற்க கள்ளை 5உண்ணற்க கள்ளை 6உண்ணற்க கள்ளை 7உண்ணற்க கள்ளை 8உண்ணற்க கள்ளை 9

 

என்னவொரு முடிவுரை – “கள் கிட்டாது, எனவே வெட்டென மற!” Winking smile