முத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52

கற்கள் அழிவதில்லை, மனிதன் அவற்றில் ஒரு வீட்டின் தரைத்தளத்தை பார்க்கும் வரை. மதுரையை சுற்றி இருக்கும் எண்ணற்ற மலைகள் பல்லாயிரம் வருடங்கள் தாண்டி நிமிர்ந்து நின்றவை. இருபது வருடங்களில் அவற்றின் பாரம்பரியத்தையே அழித்து ஒழித்து விட்டார்கள். சமண தீர்த்தங்கரர்கள் சிலர் செய்த புண்ணிய காரியத்தால் சில மலைகள், சில மலைகளின் பகுதிகள் பிழைத்து இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் பெருமாள் மலை.

12118634_10153169485387644_1345280883383278317_n12074520_10153169487222644_7688484782451357090_n

மதுரையில் இருந்து தேனி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் மதுரை காமராசர் பல்கலைகழகத்துக்கு சற்று முன்னரே பில்லர் சாலை தாண்டிய சில மீட்டர்கள் தூரத்தில் சாலை இடது புறம் திரும்புகிறது. உற்று நோக்காவிடில் தேனிக்கு பயணப்பட்டு விடலாம். சமணச்சின்னம் பெருமாள்மலை என்ற மஞ்சள் நிற பதாகை ஒன்று சாலையின் உட்திரும்பியவுடன் காணக்கிடைக்கும்.

மேலும் ஒரு கிலோமீட்டர் உள்ளே சென்றால் முத்துப்பட்டி கிராமத்துக்கு செல்லும் வழி கிடைக்கும். அங்கே பாண்டவ மலை, பெருமாள் மலைக்கு செல்லும் வழி கேட்டால் எவரேனும் சொல்லி விடுவார்கள். மனித ஆக்கிரமிப்பில் கரைந்தது போக மிச்சமுள்ள மலையை காணலாம். மலையின் பின்புறம் நடந்து சென்றால் அங்கே சமணர் குகையோன்றை காணலாம்.

இருபதுக்கும் மேற்பட்ட படுகைகள் வெட்டப்பட்ட மலைக்குகையின் வெளிப்புறத்தில் இருந்து இரண்டு தீர்த்தங்கரர்கள் மதுரையை பலநூறு ஆண்டுகளாக பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். உள்ளே கொஞ்சம் மண்டை உடைக்கப்பட்ட மகாவீரர் சிலையாக அமர்ந்து அர்த்தபரியன்காசனத்தில் தியானித்து இருக்கிறார். அநேகமாக மகாவீரரின் தனிச்சிற்பம் இந்த ஒரு மலையின் தான் காணப்படுகிறது என்று கருதுகிறேன். வேறு எங்கும் இது போல தனி சிற்பத்தை கண்டதில்லை.

12118965_10153169486572644_6034584809312372608_n

தீர்த்தங்கரர்களுக்கு கீழே இரண்டு வட்டெழுத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கி.பி 8-9ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படும் இந்த கல்வெட்டுகளில் இருக்கும் வரிகள் கீழ்வருமாறு:

’ஸ்வஸ்திஸ்ரீ பராந்தக பருவதமாயின ஸ்ரீ வல்லபப் பெரும்பள்ளிக் குறண்டி அஷ்டோபவாசி படாரர் மாணக்கர் மகாணந்தி பெரியார் நாட்டாற்றுப்புறத்து நாட்டார்பேரால் செய்விச்ச திருமேனி‘

12107988_10153169485602644_320814175282762152_n

’ஸ்வஸ்திஸ்ரீ வெண்புணாட்டுக் குறண்டி அஷ்டோப வாஸி படாரர் மாணாக்கர் குணசேனதேவர் மாணாக்கர் கனகவீரப் பெரியடிகள் நாட்டாற்றுப்புறத்து அமிர்த பராக்கிரம நல்லூராயின குயிற்குடி ஊரார் பேரால் செய்வித்த திருமேனி பள்ளிச் சிவிகையார் ரக்ஷ‘

12088569_10153169485537644_8975255395143404956_n

குரண்டி என்ற ஊரில் இருந்த பள்ளியை சேர்ந்த மாணவர் ஒருவர் இதைச் செய்ததாக கருதலாம். குரண்டியில் சமணர்களின் பெரும்பள்ளி இருந்திருக்கவும், அப்பள்ளியில் நிறைய மாணவர்கள் பயின்றிருக்கவும் கூடும். குரண்டியின் அக்காலப்பெயர்தான் பராந்தக பர்வதம். இன்னொரு கல்வெட்டில் கீழ்குயில்குடி ஊரார்க்காக குரண்டிப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் செய்திருக்கலாம்.

திடிக்காத்தான் {ம}….னம் எய்…’ குகைத்தளத்தின் கற்படுக்கையில் காணப்படும் இக்கல்வெட்டு கி.பி முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். திட்டியைக்காத்தான் என்பவன் செய்வித்து தந்த கற்படுகையாக இருக்கலாம். இக்கல்வெட்டு சிதைந்து காணப்படுகிறது.

’நாகபேரூரதைய் முசிறிகோடன் எளமகன்’ சிறுகுகைத் தளத்தில் கற்படுக்கையின் மீது தலைகீழாக இடவலமாக காணப்படும் இக்கல்வெட்டு கி.மு முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். நாகப்பேரூர் என்பது இப்பகுதியில் உள்ள நாகமலைப் புதுக்கோட்டையைக் குறிக்கும். முசிறி என்பது சேரர் துறைமுகப்பட்டிணத்தைக் குறிக்கும். இன்றைய கேரள மாநிலத்திலுள்ள முசிறியைச் சேர்ந்த இளமகன் கோடனும், நாகபேரூரின் தலைவரும் செய்துகொடுத்த கொடை எனப் பொருள் கொள்ளலாம்.

குகைத்தளத்தின் மேல் பகுதியில் மற்றொரு தமிழ் பிராமி கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. “சையஅளன் விந்தையூர் காவிய்” என சொல்லப்பட்டுள்ள கல்வெட்டும் கிமு முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாய் இருக்கக்கூடும். விந்தையூர் என்பது தற்கால வண்டியூரை குறிக்கலாம்.

12112358_10153169485657644_4121115250463971805_n

குகைத்தளத்தை பார்வையிட்ட பிறகு அனைவரும் ஒருசேர அமர, சாந்தலிங்கம் அய்யாவின் சொற்பொழிவு நிகழ்ந்தது. மேற்குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் அவரது சொற்பொழிவில் இருந்தும் சித்திரவீதிக்காரனின் முந்தைய பயணகுறிப்பு பதிவிலிருந்தும் திரட்டப்பட்டவையே ஆகும். பெருமாள்மலை என்ற பெயர் கொஞ்சமாய் உறுத்த சமணர்கள் கழுவேற்றப்பட்ட நிகழ்வையும் சைவம் வைணவம் மெல்ல தலையெடுத்த வரலாற்றையும் அசை போட்டுக்கொண்டே யோசிப்பின் அந்த பெயரின் காரணம் மெல்ல புலப்படும்.

தீபாவளி நெருங்கி வரும் வேளையில் மற்றொரு குறிப்பு உங்களுக்கு அவலாக கிடைக்கக்கூடும். நாம் கொண்டாடும் தீபாவளி சமண தீர்த்தங்கரர்களில் முக்கியமானவரான வர்த்தமான மகாவீரர் மரணித்த நாள் தான். நரகாசுரனை கொன்ற நாள் என்று நம்மை கொண்டாட வைத்திருக்கிறார்கள். மேலும் ஆவலாய் இருந்தால் தொ.பரமசிவன் அய்யா எழுதிய “அறியப்படாத தமிழகம்” படியுங்கள்.

1030வது சதய விழா நாயகனான சிவபாதசேகரனுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்..

நன்றி.

காடு – இதழ் அறிமுகம்

(காடு இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்வில் பேசிய பேச்சின் விரிவான வடிவம்)

ஐவன வெண்ணெலும், அறைக் கண் கரும்பும்,
கொய் பூந் தினையும், கொழும் புன வரகும்,
காயமும், மஞ்சளும், ஆய் கொடிக் கவலையும்,
வாழையும், கமுகும், தாழ் குலைத் தெங்கும்,
மாவும், பலாவும், சூழ் அடுத்து ஓங்கிய
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்:

சிலப்பதிகாரத்தில் வரும் காடுகாண்காதையில் மதுரைக்கு செல்லும் வழி குறித்த விவரிப்பில் மதுரைக்கும் திண்டுக்கல்லுக்கும் இடையே இருக்கும் சிறுமலை குறித்த வர்ணனை இது. இயற்கையை கலைக்கண் கொண்டு ரசித்தவன் மனிதன். இன்று கலைக்கண் கொன்று அழிப்பவனும் மனிதன் தான்.

நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே என்று சங்க காலத்திலேயே பாடல் இயற்றிய எம்மக்களுக்கு இயற்கையை பாதுகாப்பது முக்கியம் என்ற கூற்று நன்றாகவே தெரியும். மரக்கிளைகளின் நுனிகளை கிழிப்பதை கூட அறமற்ற செயலாக கருதிய மனிதர்கள் பேராசையும் சுற்றுச்சூழல் பற்றும் அற்றுப் போய் தான் வன அழிப்பில் ஈடுபடுகிறார்கள். தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த காடழிப்பு நடந்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த இருபது வருடங்களில் மட்டும் சுமார் 12000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு காடுகள் அரசின் அனுமதியோடு இந்தியாவில் அழிக்கப்பட்டுள்ளன.

காடு குறித்த தனிமனிதனின் பார்வை மிகவும் குறுகலானது என்றே தைரியமாய் சொல்லலாம். அவனுக்கு தெரிந்ததெல்லாம் மலையொன்று கண்டவுடன் அதனருகில் ஒரு கோவில் கட்டுவது, ஓடையோன்று தெரிந்தால் அதனருகில் குடித்து குப்பியை உடைப்பது. ஒரு பொதுவிடத்தில் நன்னீர் ஆதாரம் ஒன்றை கண்ணாடி குப்பிகளால், நெகிழி குப்பைகளால் நிரப்புவதென்பது இயற்கை மீதான ஒரு தீவிரவாத தாக்குதலே ஆகும்.

தற்காலத்தில் பாலைவனங்கள் என்று அறியப்படும் மத்திய தரைக்கடல் பகுதிகளும் வடக்கு சீன மாகாணமும் ஒரு காலத்தில் உலகத்தின் உணவு உற்பத்தி கூடங்களாய் இருந்தது. காடு அழிப்பும் முறையற்ற விவசாயமும் விலங்குகளை மேய விடுதலும் இணைந்து இந்த உணவு கலயங்களை பாலைவனங்கள் ஆக்கி விட்டன. மேலும் அதே தவறை செய்து கொண்டே போகிறோம். சுழற்சி முறையில் பயிரிட்டால் அந்த நிலத்தின் வளம் பாதுகாக்கப்படும் என்று அறிந்து கொண்டே சுழற்சி முறை விவசாயத்தை நாம் தவிர்த்துக் கொண்டே இருக்கிறோம். தவிர்ப்பது மட்டும் ஒரு கவலை இல்லை. பல்கிப் பெருகும் மக்கள் தொகையின் தேவைக்கு ஏற்ப உணவு உற்பத்தி செய்ய மேலும் காடுகளை அழித்து விவசாய நிலங்களையும் மேய்ச்சல் நிலங்களையும் சேர்த்துக் கொண்டே போகிறோம்.

இன்று இந்த உணவு உற்பத்தி என்னும் மேலமையான தொன்மையான விவசாயம் வியாபாரமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. மத்திய ஆப்பிரிக்காவின் பெருவனங்களை அழித்து பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் விவசாய வியாபாரம் செய்யப்படுகிறது. இதில் பெரும் பங்கு இந்தியர்களை சாரும். நில அபகரிப்பு என்று நாம் குரல் எழுப்பும் காலத்தில் நம் கண்ணுக்கு தெரியாமலேயே நம் நிலவளங்கள் சுரண்டப்படுவது நமக்கு பெரும் அதிர்ச்சியை பிற்காலத்தில் உண்டாக்கும்.

காடு என்பது என்ன? காட்டை ஏன் நாம் பராமரிக்க வேண்டும்? இத்தகைய கேள்விகளுக்கு பதில் பள்ளி நூல்களில் கிடைக்கும். அனுபவரீதியாக காட்டின் உயிர்வளியை நுகர்ந்த பேரனுபவம் கிடைத்தவர்கள் சிலர் மட்டுமே. அடர்ந்த காட்டின் மரம் சூழ் சோலைகளில் இருக்கும் உயிர்வளியின் தாக்கம் மலைச்சாலையோர பேருந்துப் பயணங்களில் கிட்டுவதில்லை. காட்டுக்குள் பிரயாணிப்பது என்பது பெரியதோர் ஆபத்தும் அல்ல. வாகனங்கள் பறக்கும் சாலைகளில் நடக்கும் விபத்துகளோடு ஒப்பிடுகையில் காட்டில் இருக்கும் வனவிலங்குகளின் தாக்குதலோ, திடீர் வெள்ளமோ, தொலைந்து போதலோ பெரிய அபாயங்கள் இல்லை.

காடு என்பது சுற்றுலாவிற்கு நாம் செல்லும் ஒரு தலமல்ல. அது வனவிலங்குகளும் மலைவாழ் மனிதர்களும் மரங்களும் பூச்சிகளும் இணைந்து வாழும் ஒரு பல்லுயிரியம். விரிந்து கிடக்கும் காட்டின் உள்ளே பயணம் செய்வதென்பது உங்கள் உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்தி புத்துயிர் ஊட்டுவது. மலைப்பயணங்களோடு மழை சேர்ந்து கொள்ளும் தருணங்களில் குதிங்காலில் ஈரம் பட மெல்ல நடை போடுவது ஆனந்தம். வெள்ளி உருகி ஓடுவது போன்ற நீரோடை தரும் நீர்ச்சுவையை எந்த செயற்கை தண்ணீர் போத்தல் தந்து விடும்? இன்றைக்கும் அருவி கண்டால் அடியில் சென்று நின்று விடுகிறானே மனிதன். அந்த அனுபவமே சாலச்சுகம். அதுவே நிதர்சனம்.

நானோர் காடோடி அல்ல. நகர வாசி. மேலும் தெளிவாய் சொல்லின் நரக வாசி. நகரத்திலும் நரகத்திலும் இருப்பது ஒரே எழுத்துக்கள் தான். அமைந்திருக்கும் இடம் மட்டுமே வித்தியாசம். நகரில் இருக்கும் எனக்கு காடு குறித்த ஆர்வம் எப்படி வந்திருக்கும் என்ற கேள்வி எழக்கூடும். கேள்விக்கு பதில் எனக்கே தெரியாது என்பது தான் உண்மை. இயற்கையை ரசிக்கும் எவருக்கும் காடு தான் உச்சம். காட்டை தாண்டி வேறொன்றும் இல்லை. காடின்றி எதுவுமே இல்லை. காட்டுக்குள் தான் மனிதன் மனிதனானான். மரத்தில் இருந்து இறங்கி நிமிர்ந்து நின்ற முதல் மனிதன் பார்த்த முதல் உலகம் காடுகளால் சூழப்பட்டதுதான். பேபீஸ் என்ற பிரஞ்சு டாக்குமெண்டரியில் வாழ்க்கையின் முதல் வருடத்தை வெவ்வேறு இடங்களில் பிறந்த குழந்தைகள் எப்படி கழிக்கின்றன என்பதை காட்சிப்படுத்தியிருப்பார்கள். அதில் ஒரு சீனக் குழந்தையால் எழுந்து நிற்க இயலாது. கடும் முயற்சிக்கு பின் ஒரு பசும்புல்வெளியில் அந்த குழந்தை எழுந்து நின்று சிரிப்பதோடு அந்த படம் முடியும். அது போன்றதொரு உச்சத்தை எனக்கு என் முதல் காட்டுப் பயணம் தந்தது. தந்து கொண்டேயிருக்கிறது.

காடு நமக்கு தந்தது போதும். நாம் காட்டுக்கு என்ன தரப்போகிறோம் என்ற கேள்வி எனக்குள் எழுந்து கொண்டேயிருந்தது. காடு குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் காடு என்ற பல்லுயிரியம் எவ்வாறு நமக்கு இன்று வரை சோறூட்டுகிறது என்று விளங்க வைக்கவும் ஒரு கருவி நமக்கு வேண்டியிருக்கிறது. இன்று தினமும் காட்டிற்குள் பிரயாணித்து மக்களை அழைத்து சென்று பேசும் நிலையில் நாம் இல்லை. ஆனால் காடு நம்முள் பிரயாணித்துக் கொண்டே தான் இருக்கிறது புத்தக வடிவில்.

390_thumb_1390_thumb_1 (1)

சுற்றுச்சூழலை பேண, வனநலன் காக்க பெரும் விழிப்புணர்வு உருவாக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இன்று உள்ளது. வன உரிமை சட்டம் என்று தொல்குடிகள் உரிமைக்காக தனி சட்டம் இயற்ற வேண்டிய தேவை எதனால் ஏற்பட்டது என்று ஆராய்ந்து அதற்கான பதிலில் அந்த காரணங்களுக்கான தீர்வை சொல்ல வேண்டிய தருணம் இது. இந்த சூழ்நிலையில் சுற்றுச்சூழலியல் குறித்த பத்திரிக்கை ஒன்று தொடர்ந்து வருவது அவசியம் என்றே நான் கருதுகிறேன். காடு அதற்கான தேவையை தக்க வைத்துக் கொள்ளும் என்று நான் தீவிர நம்பிக்கை கொண்டுள்ளேன்.

ரப்பர் தோட்ட தொழிலாளிகளுக்காக போராடிய பிரேசிலின் சிக்கோ மென்டிஸ் போலவோ, பாமாயில் வணிகத்தில் இருந்து சுமாத்ர வனங்களை காக்க போராடிய இந்தோனேசியாவின் ரூடி புத்ராவை போலவோ, தனி ஒருவனாய் ஒரு காட்டையே உருவாக்கிய ஜாதவ் பாயேங் போலவோ இன்னொரு இயற்கை விரும்பி தானாக உருவாகப்போவதில்லை. ஆனால் காடு போன்ற இதழ்கள் மூலம் ஊட்டப்படும் தொடர் விழிப்புணர்வின் மூலம் நம்மால் இன்னொரு சிக்கோ மென்டிசையோ ரூடி புத்ராவையோ உருவாக்க முடியும்.

காடு இதழ் ஒரு புள்ளியை நோக்கி பயணிப்பது போல் எனக்கு தோன்றவில்லை. வன பாதுகாப்பு மட்டுமல்லாமல் பழங்குடி மக்கள், வன உயிரினங்கள், பறவைகள், பூச்சிகள் என்று பல தளங்களில் ஒரு விசாலமான பார்வையோடு ஒரு தெளிவான நோக்கத்தோடு பயணிப்பது சிறப்பு. “காடுகாட்டை போலவே எந்த குறுக்கீடும் தடங்கலும் இன்றி சுதந்திரமாய் வளர, பல மொழிகளிலும் விரிவுற்று பயணிக்க, எனது வாழ்த்துகள். நன்றி.

காடு இதழ் பெற:

இங்கே சுட்டவும்

ஒரு வருடம் – ரூபாய் 300

இரண்டு வருடங்கள்  – ரூபாய் 600.

மேலும் தொடர்புக்கு:

Thadagam Publications

1st Floor, Venkateshwara Complex,
112 Thiruvalluvar Salai
Thiruvanmiyur, TN. IN 600 041

91.44 4310.0442 (main number)
91.8939967179 (mobile number)

உழந்தும் உழவே தலை

“அலகிலா மறைவிளங்கும் அந்தணர் ஆகுதி விளங்கும்

பலகலையான் தொகை விளங்கும் பாவலர்தம் பா விளங்கும்

மலர்குலாந்திரு விளங்கும், மழை விளங்கும், மனுவிளங்கும்

உலகெலாம் ஒளி விளங்கும் உழவருழும் உழவாலே”

10460462_901125583265883_8947365232916167700_n

உழவர்களை நாம் கொண்டாட மறந்து பல ஆண்டுகள் ஆகின்றன. உழவுத் தொழில் நசிந்து உணவு உற்பத்தி குறையும் நிலை பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உழவு பற்றிய அறிவை நம் மக்களுக்கு தெரியவைக்கவும் குழந்தைகளுக்கு நம் கலாசாரம் பற்றிய ஒரு அறிமுகத்தை அளிக்கவும் முயற்சிகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது. 

ஆனால் இத்தகைய முயற்சிகள் எப்போதும் நடப்பதில்லை. அப்படி ஒரு நிகழ்வு நடக்கும் போதில் அதில் எப்படியேனும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம தலைதூக்கும். இந்த முறை ஒரு நிகழ்வை நடத்தும் வாய்ப்பே பசுமை நடை மூலம் கிடைத்தது. பசுமை நடை நண்பர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்ட ஒரு பெருவிழாவாய் இது அமைந்தது.

10897800_901128976598877_5309248992013963706_n

பசுமை நடையின் பொங்கல் விழா வடபழஞ்சி அருகேயுள்ள வெள்ளபாறைப்பட்டியில் இனிதே நடந்தது நேற்று. பின்தங்கிய ஒரு கிராமத்தில் நடந்த விழா பால்ய கால பொங்கல் கொண்டாடல்களை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது. கிராமத்திற்கு சென்று கரும்பு கடித்து சக்கை மென்று துப்பி கிராமத்தெருக்கள் முழுவதும் கரும்புச்சக்கைகளால் நிரப்பிய பொழுதுகள் கண் முன் வந்து போனது. கிணற்றுத்தண்ணீர் குளியலும் அதிகாலை பொங்கலும் அளித்த ஆனந்தத்தை கொஞ்சமேனும் மீட்டுத் தந்தது இந்த திருவிழா.

நிகழ்விற்கு மூன்று நாட்கள் முன்பிருந்தே நண்பர்கள் அதற்கான வேளைகளில் ஈடுபட தொடங்கியிருந்தார்கள். கிராம மக்களோடு இணைந்து என்ன வேலைகளை யார் செய்வது போன்ற ஏற்பாடுகள் செவ்வனே நடைபெற்று வந்தன. நேரமின்மையால் கலந்து கொள்ள முடியாமல் போனாலும் முகநூல் வழி மேலதிக தகவல்களை பார்த்துக் கொண்டேயிருந்தேன். நிகழ்விற்கு முந்தைய நாள் அனைவருக்குமான இரவு உணவை வாங்கிக் கொண்டு கிராமத்திற்கு போனேன்.

பெரும்பாலான ஏற்பாடுகள் முடிந்து போயிருந்தன. அனைவரும் பசியோடு இருந்ததால் உணவு உண்ண எத்தனித்தோம். ஒரு பெரிய மரத்தின் அடியில்  கூதற்காற்றின் வருடலில் இட்லிகளும் பரோட்டாகளும் உள்ளே சென்றது. பின்னர், வரும் நண்பர்களுக்கு வழி காட்ட தட்டிகள் கட்டவும் சாலைகளில் சுண்ணாம்புக் கரைசலால் குறியீடுகள் இடவும் வேண்டியிருந்தது. சரவணன், நான், ஹியூபர்ட், சித்திரவீதிக்காரன், செந்தில், கந்தவேல், மற்றும் மதுமலரன் அந்த வேலையை செய்து முடித்தோம்.

மறுபடி ஊருக்கு வந்து ஊருக்கு மத்தியில் இருக்கும் பாறைமேல் படுத்துக் கதைத்தோம். ஒரு ஊழிக்காலத்து வெள்ளத்தில் ஊர் மக்கள் அனைவரும் மூழ்கி மரணிக்க இருந்த வேளையில் இந்த பாறை மேல் ஏறி நின்றதாகவும் அந்த பாறை நீரில் மிதந்து அவர்களை காத்ததாகவும் ஊர் மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதனால் இன்றளவும் அந்த பாறையை அவர்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். செருப்பணிந்து பாறை மேல் ஏறுவது தடை செய்யப்பட்டுள்ளது. இரவு வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். மெல்ல அனைவரையும் உறக்கம் தழுவ சிலர் வீடு நோக்கி புறப்பட்டார்கள். நான் எனது காரிலேயே உறங்கினேன்.

அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தேன். மனைவியும் மகனும் தயாராக பின் காரில் வெள்ளபாறைப்பட்டி நோக்கி புறப்பட்டோம். நாங்கள் சென்ற வேளையில் நன்றாக விடிந்து விட்டிருந்தது. பொங்கல் வைக்கும் ஏற்பாடுகள் மும்முரமாய் நடந்து கொண்டிருந்தது. ஆட்டுக்குட்டிகளை பார்த்து குதியாளம் போட்டபடி காரிலிருந்து இறங்கி ஓடினான் ஆதன்.

IMG_9580-2

சற்று நேரத்தில் விழா தொடங்குவதாக முத்துகிருஷ்ணன் அறிவித்தார். பசுமை நடை உறுப்பினர்கள் அனைவரும் கூடி ஊர் முழுக்க சென்று கதவுகளை தட்டி ஊர் மக்களை விழாவில் கலந்து கொள்ளும்படி அழைத்தார்கள். மற்றொரு புறம் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கியிருந்தன. கொரியாவில் இருந்து மதுரையின் ஒரு கல்லூரியில் படிக்க வந்திருக்கும் பெண்கள் சிலர் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். பலூன் உடைத்தல், முறுக்கு கடித்தல், பாட்டில் நிரப்புதல், இளவட்டக் கல் தூக்குதல் போன்ற விளையாட்டுகளில் மக்கள் பெரும் உற்சாகத்தோடு கலந்து கொண்டார்கள்.

IMG_9826

10917376_901126069932501_8468682185633501560_n

10423279_901127949932313_3122283141044457700_n

10305042_901126563265785_7474851606855890293_n

விளையாட்டுக்கள் முடிந்த சற்று நேரத்தில் குலவை சத்தத்தோடு பொங்கல் பொங்கியது. காலை உணவு ஆரம்பமானது. ஊர் மக்கள் எல்லோரும் வரிசையில் நின்று உணவு வாங்க, பசுமை நடையின் ஆர்வலர்கள் பாசத்தோடு பரிமாற சுவையான சர்க்கரை பொங்கலும் சூடான வெண்பொங்கலும் பரிமாறப்பட்டது. ருசித்து சாப்பிட்ட மக்கள் அனைவரும் பாறை மேல் ஏறி அமர போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா ஆரம்பித்தது.

IMG_9600

IMG_9816

10151987_901130189932089_7268186705003793807_n

10923495_901130509932057_5758240078971602267_n

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அய்யா சாந்தலிங்கம் ஊர்த்தலைவரும் பரிசுகளை வழங்கினார்கள். சாந்தலிங்கம் அய்யாவின் பேச்சில் உழவுத்தொழிலின் தொன்மை குறித்த குறிப்புகள் அதிகம் இருந்தன. மேலும் அத்தகைய தொன்மை மிகுந்த தொழில் நசிந்து வருவதை குறித்த வருத்தமும் இழையோடி இருந்தது. பின்னர் நம் பசுமை நடை குழுவினருக்கு இந்த விழா நடக்க பெரிதும் உறுதுணையாய் இருந்த ராமசாமி அண்ணனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

IMG_9793

இந்த நிகழ்வின் பின்பு உறியடி திருவிழா ஆரம்பமானது. கட்டையை எடுத்துக் கொண்டு முதலில் கிளம்பிய ஹுயுபர்ட் அண்ணன் உறிக்கு நேரெதிர் திசையில் நடக்க விழா களை கட்டியது. ஏதோ ஞாபகத்தில் சட்டென்று உறி இருக்கும் திசைக்கு திரும்பி மிக அருகே சென்று விட்டார். ஆனால் கடைசி நிமிடத்தில் திசை மாறிப் போனார். பிறகு பசுமை நடை உறுப்பினர்கள் பலரும் முயற்சித்து வெற்றியடையாமல் திரும்பி வந்தார்கள். முடிவாய் வெள்ளபாறப்பட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உறியை அடிக்க விழா இனிதே நிறைவடைந்தது. மக்கள் அனைவரும் வீடடைய பசுமை நடை நண்பர்கள் அனைவரும் இணைந்து மதிய உணவு உண்டு விட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

10553483_901132373265204_2227258840335530460_n

மதுரையில் இருந்து வெறுமனே 8 கி.மீ தொலைவில் இருக்கும் கிராமம் இப்படி பின்தங்கிய நிலையில் இருப்பது அதிர்ச்சியளித்தது. கிராமத்தை சுற்றி ஒரு பெருஞ்சுவர் ஒன்றும் காணப்பட்டது. அது குறித்து விசாரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் மறந்து போனது. ஆனால் நண்பர் பாடுவாசி ரகுநாத்தின் பதிவில் அது குறித்த நீண்ட விளக்கம் இருக்கிறது. அதிர்ச்சி அளிக்கும் விளக்கம் அது (சுட்டி கீழே).

இரண்டு வயதில் நான் கொண்டாடிய கிராமத்து பொங்கல் என் மகனுக்கு வாய்க்காமலே போய் விடுமோ என்ற கவலையை போக்கி விட்டது இத்திருவிழா. அதிகாலை எழுவதே ஒரு சிரமம் என்று இருக்கும் ஒரு காலகட்டத்தில் நேற்று மட்டும் எப்படி அவன் விடிகாலை துயில் களைந்தான் என்று இப்போதும் ஆச்சர்யமாய் இருக்கிறது. ஊருக்கு சென்றதும் அங்கு கண்ட வெள்ளாட்டு குட்டிகளோடு விளையாடி கோழி பிடித்துக் களைத்தான். சுற்றி நின்ற ஒத்த உணர்வுடைய நண்பர்களோடு பேசித் திளைத்தான். தமிழர் திருவிழாவில் தமிழனாய் முளைத்தான். இரண்டு வயதில் அவனுக்கு கிட்டிய இப்படி ஓர் அனுபவம் நகரத்தின் கட்டிடக்காடுகளுக்குள் டிவி பார்த்து கொண்டாடும் பிள்ளைகளுக்கு கிட்டுவதில்லை என்பது நிச்சயம்.

IMG_9784

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பணம் கொடுப்பதோ அவர்கள் வசதியாய் வாழ வழி செய்து கொடுப்பதோ பெரிய விடயமில்லை. ஆனால் வாழ்வின் நுண்அற்புதங்களை, கிராமத்து வாழ்வின் அழகியலை, அவ்வூர் பிள்ளைகளின் விளையாட்டை, பலன் எதிர்பாரா நட்பை, அன்பை உங்கள் பிள்ளைகளுக்கு அனுபவமாய் கிடைக்க வழி செய்வது கண்டிப்பாய் பெரிய விஷயம் தான்.

இரண்டு வயதில் அவனுக்கு என்ன புரிந்திருக்கும் என்று யோசிக்கலாம். ஆழ்ந்து சிந்தித்தால், இரண்டு வயதில் அவனுக்கு என்ன புரிந்திருக்க வேண்டுமோ அது புரிந்திருக்கும்.

மேலும் இந்த விழா குறித்த பதிவுகள்:

பாடுவாசி ரகுநாத் – தை பிறக்கட்டும்; வெள்ளப்பாறைபட்டிக்கு வழி பிறக்கட்டும்.

வஹாப் ஷாஜஹான் – பொங்கல் விழா

படங்கள் உதவி – அருண் பாஸ் (JV fashion studios) மற்றும் ஹுபர்ட் அண்ணன் கேமிரா!

Imitinef mercilet என்றோர் மருந்தேயில்லை!

கண்டிப்பாய் பகிர வேண்டிய தகவல். Please share.

அடையாறு கேன்சர் மருத்துவமனை "Imitinef Mercilet" என்ற கேன்சரை குணப்படுத்தும் மருந்தை இலவசமாய் தருகிறது என்றும் இதை பயன்படுத்தினால் அனைத்து வகை கேன்சரில் இருந்தும் விடுபடலாம் என்றும் ஒரு தகவல் இணையத்தில் புரையோடிக் கிடக்கிறது.

முதலில் ஒரு சிறு விளக்கம். அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரில் மருந்து ஒன்றுமே கிடையாது. அந்த மருந்தின் பெயர் "Imatinib Mesylate." இந்த மருந்து Chronic Myelogenous Leukemia (CML), சில வகையான வயிற்றுதசைகளில் வரும் கேன்சர்கள், மற்றும் சில குறிப்பிட்ட வகை கேன்சர்களுக்கும் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த மருந்தும் இந்த கேன்சர்களை குணப்படுத்துவதில்லை. கட்டுப்படுத்த மட்டுமே செய்கிறது. மருந்து போக அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி மற்றும் வேறு சில மருந்துகளோடு சேர்ந்து கேன்சரை கட்டுப்படுத்தலாம். ஆரம்பகட்ட நிலையிலேயே கேன்சர் இருப்பதை கண்டு கொண்டால் குணப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

ஆனால் இத்தகைய தப்பான தகவலை பயன்படுத்துவதால் என்னாகும்?

1. ஒரு கேன்சர் நோயாளிக்கு தவறான வழி காட்டப்படுகிறது. அதை அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் உண்மை நிலை தெரிய வரும் போது அவர்களுக்கு மருத்துவர்கள் மேல், மருத்துவ சிகிச்சைகளின் மேல், இந்த செய்தியை பகிர்ந்து கொண்டவர்கள் மேல் அவநம்பிக்கை ஏற்படுகிறது.

2. மருத்துவ சிகிச்சை அளிக்கும் ஒவ்வொரு மருத்துவரும் நோயாளிக்கு நம்பிக்கையை தான் முதல் சிகிச்சையாய் வழங்குவார்கள். ஏனென்றால் மருந்துகள் 50% குணப்படுத்தும் என்றால் குணமாகும் என்ற நம்பிக்கை தான் மிச்சம் 50% குணப்படுத்தும். தவறான செய்தியால் உண்டாகும் அவநம்பிக்கை அந்த நோயாளி குணமடையும், மருத்துவத்துக்கு ஒத்துழைக்கும் வாய்ப்பிற்கு பெரிய தடங்கலை உண்டாக்குகிறது.

3. ஆரம்பகட்ட கேன்சரில் இருக்கும் ஒருவர் "அதுதான் மருந்து இருக்கிறதே" என்று ஏற்கனவே எடுத்துக் கொண்டு இருக்கும் மருந்தை, சிகிச்சையை மறுத்தால் என்னவாகும்? அவரது உயிர் போனால் நீங்கள் மருத்துவரை பழிசொல்வீர்களா அல்லது பகிர்ந்தவரை பழி சொல்வீர்களா?

4. அந்த மருத்துவமனையின் நிலையை யோசித்து பாருங்கள். எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டும். ஒவ்வொருவருக்கும் விளக்கிச் சொல்ல வேண்டும். ஒரு நாளைக்கு சராசரியாய் 20 அழைப்புகள் வருகின்றனவாம். இதற்கு பதில் சொல்வதா அந்த மருத்துவமனையின் வேலை.

5. அடையாறு கேன்சர் மருத்துவமனை ஏழை நோயாளிகளுக்கு இந்த மருந்தை இலவசமாகவே வழங்குகிறது. பிறர் மாதம் 8000 ரூபாய் செலுத்தி இந்த சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இந்த சிகிச்சையை அடையாறு மருத்துவமனை மட்டுமின்றி வேறு பல கேன்சர் சிகிச்சை மையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

6. இது மட்டுமல்ல.. ஜான்சன் பேபி சோப் உபயோகித்தால் சரும நோய் வரும் என்று தாமரை மலரின் நடுப்பகுதியை ஒரு மனித உடலின் மேல் ஒட்டிய படத்தோடு கூடிய செய்தி, பொட்டாசியம் பெர்மாங்கநேட் உபயோகித்தால் பற்கள் வெண்மையாகும் என்ற செய்தி, வலது காதில் போன் பேசினால் பாதிப்புகள் என்ற செய்தி, லிப்ஸ்டிக்கில் இருக்கும் பொருளினால் கேன்சர் வரும் என்ற செய்தி போன்றவையும் போலியானவை தான்.

தயவு செய்து இதை பகிருங்கள். இல்லை இதுபோன்று தகவல்கள் எதுவும் வந்தால் கொஞ்சம் இணையத்தில் தேடிப்பார்த்து அது உண்மையா என்று கண்டறிந்து பகிருங்கள்.

அடையாறு கேன்சர் மருத்துவமனையின் விளக்கம் இந்த சுட்டியில் – http://cancerinstitutewia.in/ACI/news&events.php

Capture

பாம்பின் பிழையன்று தீண்டிப் போதல்!

சஞ்சிகை (sanjigai.wordpress.com) காட்டுயிர் சிறப்பிதழுக்காக எழுதிய கட்டுரை.

அவன் மடிமேல் வலந்தது பாம்பு;

பாம்பு தொடி; பாம்பு முடி மேலன;

பாம்பு பூண்; பாம்பு தலைமேலது;

பரிபாடல் 4 – திருமால்.

8007030158_2c1c6f468d_z

சங்க இலக்கியங்களில் பெரிதும் பாடப்பட்டுள்ளது பாம்பு. சோதிடக்கலையிலும் ராகு அல்லது கேதுவை பாம்பென்றே கருதி வந்துள்ளனர். தமிழர் மட்டுமன்றி உலக மக்கள் வாழ்வில் பெரும்பங்கு வகிப்பவை பாம்புகள். ஆயினும் பாம்புகள் குறித்த தவறான கருத்துக்கள், மூட நம்பிக்கைகள் நமது சமூகத்தின் வேர்களினூடே விரவிக் கிடக்கின்றன. இந்து வழிபாட்டு முறைகளில் பாம்புக்கு பெரியதோர் இடமுண்டு. நாக கன்னி, அரவான், உலுப்பி, சங்கன், புற்றீசர் என்று பலவகைகளில் நம் மக்கள் பாம்புகளை வழிபட்டு வந்துள்ளனர். இந்து மதம் மட்டுமன்றி பௌத்த மதத்திலும் சிந்து சமவெளி நாகரிகத்திலும் கூட நாக வழிபாடு காணப் படுகிறது.

காட்டுயிர்களில் பிரதானமான ஓரிடம் பாம்புகளுக்கு உண்டு. இருவகைப்பட்ட (நச்சு மற்றும் நச்சற்ற) பாம்புகளும் தற்போதைய சூழலியல் அமைப்பில் பெரும்பங்கு ஆற்றி வருகின்றன. இடைநிலை கொன்றுண்ணிகளாய் பாம்புகள் நமக்கு ஆற்றி வரும் பங்கை விளக்குதல் எளிதன்று.

பாம்பும் அவை சார்ந்த மூடநம்பிக்கைகளும்:

கல்வியறிவு நிறைந்த இந்த சமூகத்தில் பல்வேறு கட்டுக்கதைகள் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்க்கலாம்.

கொம்பேறி மூக்கன் – இந்த பாம்பு ஒருவரை தீண்டிவிட்டால் மரத்தின் உச்சியில் ஏறி நின்று அவர் எரிக்கப்பாடுகிறாரா என்று பார்க்குமாம். உண்மை என்னவென்றால், கொம்பேறி மூக்கன் நச்சற்ற பாம்பு. Bronzeback Treesnake என்று ஆங்கிலத்தில் அறியப்படுவது. இதை நான் கையில் வைத்து ஆராய்ந்து பார்த்திருக்கிறேன்.

பாம்புக்கொலை: ஒரு பாம்பை கொன்றுவிட்டால் அந்த இணை கொன்றவரை தேடிச் சென்று பழிதீர்க்கும். உண்மை என்னவென்றால் ஒரு பாம்பு கொள்ளப்படும் போது அது மஸ்க் என்ற ஒரு திரவத்தை வெளியேற்றும். இனச்சேர்க்கைக்கு உதவும் அந்த மஸ்க்கால் ஈர்க்கப்பட்டு பிற பாம்புகள் அங்கு வரும்.

இசைக்கேற்ப நடனமாடும்: காற்றில் வரும் ஒலி அலைகளை முழுவதும் கிரகிக்கும் தன்மை பாம்புகளுக்கு கிடையாது. அவை நிலவழி அதிர்வுகளின் மூலமே தன்னை சுற்றி நடப்பவற்றை அறிந்து கொள்கின்றன. வாசனைகளின் மூலம் அறிந்து கொள்ளும் திறனும் பாம்புகளுக்கு வாய்த்திருக்கிறது. நாக்கை நீட்டி நீட்டி பாம்பு பார்ப்பது தீண்டுவதற்கு அன்று. நாக்கை உள்ளிழுத்த பின் மேலண்ணத்தில் இருக்கும் ஜேக்கப்சன் உறுப்பை நாக்கால் தொடும். இந்த ஜேக்கப்சன் உறுப்பே வாசனைகளை பிரித்தறிய உதவுகிறது. பாம்புகளுக்கு செவிப்பறைகள் கிடையாது. மகுடிக்கு பாம்புகள் ஆடுவதுண்டு. ஆனால் இசைக்கு அல்ல. அந்த மகுடிக்கு பதில் நீங்கள் ஒரு வெள்ளைத்துணியை ஆட்டினால் கூட அதற்கேற்ப பாம்பு அசையும்.

பாம்பு நடனம்: நாகமும் சாரையும் இணையும் என்று நம்புகிறார்கள். உண்மையில் இரு பாம்புகள் பின்னிப் பிணைவது ஒரு இனப்பெருக்க நிகழ்வே. உற்று நோக்கினால் இரண்டுமே சாரைப்பாம்புகள் என்று அறியலாம்.

பாம்புக்கடி:

பாம்புகள் தேவையின்றி யாரையும் கடிப்பதில்லை. தனது உயிருக்கு ஒரு ஆபத்து என்று அது கருதினால் ஒழிய அது உங்களை தீண்ட முயற்சிக்காது. அது வெளியேற ஒரு வழி ஏற்படுத்திக் கொடுத்து விட்டால், அது தான் போக்கில் போய் விடும். மேலும் பல நேரங்களில் பாம்புகள் கடித்தாலும் நஞ்சை உள்செலுத்துவதில்லை. நஞ்சை செலுத்துதல் ஒரு இச்சைச்செயலாகும். அது அனிச்சை செயல் அல்ல. இதை ஆங்கிலத்தில் wet bite/dry bite என்பார்கள். எனினும் நஞ்சு உள்ளே சென்றிருக்கிறதா என்பதை பாம்பு மட்டுமே அறியும் என்பதால் அனைத்து பாம்புக்கடிகளும் wet bite ஆகவே கருதப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.

பல் பிடுங்கிய பாம்புகளால் ஆபத்தில்லை என்பார்கள். முழுவதும் தவறான கருத்து இது. பாம்புகள் மனிதனை போல் அல்ல. அவற்றிக்கு வாழ்நாள் முழுவதும் பற்கள் விழுந்து முளைக்கும். இதை polyphodont என்பார்கள். மனிதன் Diphodont. ஆகையால் பாம்பின் பல் பிடுங்கப்பட்டு இருந்தாலும் அதன் பல் மறுபடி முளைத்து விடும். இதை அறியாமல் பல பாம்பாட்டிகள் கடிபட்டு மரணமடைந்திருக்கிரார்கள்.

8007031081_9c9117e661_z

சிகிச்சை:

பாம்பின் கடிக்கு சிகிச்சை மிகவும் அவசியம். கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றினால் கடி பட்டவரை காப்பாற்றலாம்.

· அமைதி காக்க வேண்டும். கடி பட்டவரை பதற்றம் அடைய செய்ய கூடாது.

· சாதாரண மாத்திரை ஒன்று கொடுக்கலாம். அது கடிபட்டவருக்கு ஆறுதல் அளிக்கவே.

· கடிபட்ட இடத்தில் கட்டு எதுவும் போடக்கூடாது. மேலும் கத்தியால் கீறி விட்டு ரத்தத்தை உறிவதும் தவறான அணுகுமுறையாகும்.

· உடனே கடிபட்டவரை நச்சுமுறி மருந்து உள்ள ஒரு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். வேறு எந்த சிகிச்சையும் அளிக்கத்தேவையில்லை.

நாட்டு மருந்துகள், மந்திரம் ஓதுதல், லெக்சின் (Lexin), திரியாக் (Thiriyaq) போன்ற பதிவு பெற்ற மருந்துகள், போன்ற வழிமுறைகளை தவிர்க்க வேண்டும்.

இருளர் சமுதாயம் பாம்புகளின் மூலமே வாழ்வாதாரத்தை பெறுவதால் காலங்காலமாய் செய்த வேலையின் மூலம் சில நச்சுமுறி மூலிகைகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த மூலிகைகளில் இருக்கும் மூலப்பொருள் பற்றி எந்தவித ஆராய்ச்சியும் இதுவரை நடந்ததில்லை.

முக்கியத்துவம்:

எலிகள் பெரும் கொறிவிலங்குகள். நம் நாட்டில் விளையும் தானியங்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் வரை எலிகளால் பாழடிக்கப்படுகின்றன. இவற்றால் உண்டாகும் பொருளாதார சேதம் அதிகம். நீலகிரியில் உள்ள தேயிலை தோட்டத்தில் ஆண்டிற்கு 5 லட்சங்கள் வரை எலிகளால் சேதாரம் ஏற்படுவதாக ரோமுலஸ் விட்டேகர் (இந்திய பாம்புகள்) குறிப்பிடுகிறார். வளைகளுள் பதுங்கும் எலிகளை பிடித்து உண்ண பாம்புகள் தேவை. ஆனால் தேயிலை தோட்டங்களுக்காக காடுகளை அழித்ததில் பாம்புகளின் வாழ் சூழல் கடுமையாய் பாதிக்கப்பட்டது. இதே நிலை தொடர்ந்தால் எலிகள் பெருகி தானிய உற்பத்தி கடுமையாய் பாதிக்கக்படக்கூடும். உணவு உற்பத்தி பெருக வேண்டுமாயின் நாம் பாம்புகள் வாழ எதுவாய் உள்ள இடங்களையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. இயற்கை வேளாண்மை முறைக்கு பாம்புகள் மிகவும் அவசியமானவை என்பதை இதன் மூலம் அறியலாம்.

பாம்புகளின் நஞ்சில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் மருத்துவத்துறையில் பல்வேறு சிகிச்சைகளுக்கு உதவுகின்றன. அதில் முக்கியமானவை நச்சுமுறி மருந்து தயாரிப்பு மற்றும் இருதய நோய்க்கான மருந்துகள். பாம்புக்கடிக்கான நச்சுமுறி மருந்து பாம்பும் நஞ்சில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. மேலும், மாரடைப்பு வந்தவர்கள் உட்கொள்ளும் எப்டிபிபடைட் (Eptifibatide) மற்றும் டிரோபிபான் (Tirofiban) போன்றவையும் குருதி உறையாமல் தடுக்கும் ரஸ்ஸல்ஸ் வைப்பர் வேனோம் போன்றவையும் மருத்துவத்துறைக்கு அத்தியாவசியமாய் இருக்கின்றன. சமீபகாலமாய், சில பாம்புகளின் நஞ்சில் இருந்து புற்றுநோயை எதிர்க்கும் தன்மை உடைய புரதங்களை எடுக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். மரத்துப் போகும் தன்மை கொண்ட நச்சுக்களில் இருந்து நரம்பியல் வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. மேலும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

ஒன்றை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். பாம்பு நம் வீட்டிற்குள் வருவதில்லை. நாம் தான் அதன் இருப்பிடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வருகிறோம். அடுத்த முறை பாம்பு ஒன்று வீட்டினுள் நுழைந்தால் அதை அடிக்க கட்டையை தேடாமல் உங்கள் அருகில் இருக்கும் தீயணைப்புத் துறைக்கு அல்லது வனத்துறை அலுவலகத்துக்கோ தொடர்பு கொண்டு தகவல் சொல்லுங்கள். அவர்கள் அந்த பாம்பை பத்திரமாக எடுத்துச் சென்று ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் விட்டு விடுவார்கள்.

மேலும் படிக்க:

இந்திய பாம்புகள் – ரோமுலஸ் விட்டேகர் – நேஷனல் புக் ட்ரஸ்ட்

Snakes of India (Field guide) – Romulas Whittaker – Draco books

The snakes of India – CKG Gharpurvey – Asiatic publishing house

My husband and other animals – Janaki Lenin – Westland books

பசுமை நடை 25 – விருட்சத் திருவிழா.

பசுமை நடை – அ.முத்துகிருஷ்ணன் என்னும் விதையில் ஆரம்பித்து இன்று விருட்சமாய் வளர்ந்து நிற்கும் அமைப்பு. பண்டைய தமிழ் கோவில்கள், சமணர் கோவில்கள், சமணர் குகைகள் என்று பயணித்து வரலாற்றை மீட்டுக் கொண்டு வர முயலும், அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுக்கொண்டிருக்கும் அமைப்பு.

24 பசுமை நடைகள் முடிந்த நிலையில் 25ஆம் பசுமை நடையை ஒரு பெருவிருட்சத்தின் நிழலில் ஊர் கொண்டாடும் ஒரு திருவிழாவாய் நடத்த திட்டமிட்டோம். அதற்காய் தேதி ஒன்றும் குறிக்கப்பட்டது. குறிப்பை உணர்த்தும் வகையில் ஆகஸ்டு திங்கள் 25ஆம் நாள் இந்த திருவிழா நடைபெறும் என்று அறிவித்தார் முத்துகிருஷ்ணன்.

அதே நாளில் இதுவரை சென்ற பசுமை நடை பயணங்களை தொகுத்து ஒரு வரலாற்று ஆவணமாய் வெளியிட வேண்டும் என்றும் அறிவித்தார். பசுமை நடை உறுப்பினர்கள் மற்றும் மதுரை மக்கள் குடும்பத்தோடு கூடிக்கொண்டாடும் திருவிழாவாய் இதை நிகழ்த்திக் காட்ட பசுமை நடை நண்பர்கள் எடுத்த முயற்சி சிறிதொன்றும் அல்ல. அவர்களுக்கு முதற்கண் என் வாழ்த்துக்கள்.

ஆகஸ்டு திங்கள் 23ஆம் முதல் சந்திப்பு அதே கீழக்குயில்குடி சமணமலை அடிவாரத்தில் நிகழ்ந்தது. விருட்சத்திருவிழாவின் பொறுப்புகள் பகிர்தளிக்கப்பட்டது. மேலும் அமெரிக்கன் கல்லூரி, லேடி டோக் கல்லூரிகளில் இருந்து மாணவர் படை ஒன்றும் நிகழ்வை நடத்த உதவி செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

வந்தது ஆகஸ்டு திங்கள் 25ஆம் நாள். அதிகாலை துயில் எழுந்து குளித்து முடித்து தயாரானேன். என் மருத்துவமனையில் பகுதி நேரமாய் வேலை செய்யும் மோகன் தானும் வரவேண்டும் என்று பிரியப்பட்டதால், அவனையும் அழைத்துக் கொண்டு கிளம்பினேன். அச்சம்பத்து தாண்டி வண்டியில் சென்று கொண்டிருக்கும் போதே நண்பர்கள் விஷ்ணு மற்றும் ராஜேஷை சந்தித்துவிட்டேன்.

சமண மலை அடிவாரத்தை அடைந்ததும் பசுமை நடை செய்திருந்த ஏற்பாடு என்னை ஆச்சர்யப்படுத்தியது. வெயில் மக்களை பாதிக்காமல் இருக்க ஷாமியானா தடுப்பு, மக்கள் தரையில் அமர கார்பெட் விரிப்பு என்று அனைத்தையும் யோசித்து செய்திருந்தனர்.

IMG_0224

மிகவும் முக்கியமான விஷயம் – பெண்கள் அதிகம் வருவார்கள் என்பதால் அவர்கள் நிலையையும் யோசித்து மதுரை மாநகராட்சியில் இருந்து ஒரு நடமாடும் கழிப்பறையையும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

1176353_681251388570961_2141823564_n

விழா தொடங்கும் முன் செட்டிபுடவு வரை ஒரு சிறு நடை சென்றனர். அய்யா சாந்தலிங்கம் அங்கு சென்று வரலாறு சொல்லும் உண்மைகளை ஆர்வலர்களுக்கு எடுத்துரைத்தார். நானும் சில நண்பர்களும் தொலைதொடர்பு சம்பந்தமான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டதால் அதில் பங்குகொள்ள இயலவில்லை.

Santhalingam sir settipudavu

செட்டிப்புடவு சென்று திரும்பி வந்த அனைவருக்கும் காலை உணவு தயாராகி காத்திருந்தது. இயற்கை உணவிற்கான மூலப் பொருட்களை தேடிச் சென்று வாங்கி வந்து அதை அங்கேயே சமைத்து பரிமாறினர். காலை உணவாய் சர்க்கரை பொங்கல் (அக்கர அடிசில்) மற்றும் வெண்பொங்கல் பரிமாறப்பட்டது. சாம்பாரும் மிளகாய் தூக்கலான தேங்காய் சட்னியும் தொட்டுக்கொள்ள.

உணவருந்திய பின் நண்பர்கள் அனைவரும் சென்று ஆலமரத்தின் கீழ் அமர, நிகழ்வு இனிதே துவங்கியது. முத்துகிருஷ்ணன் மற்றும் சில பசுமை நடை நண்பர்கள் பேசிய பின், அய்யா சாந்தலிங்கம் பேசினார். பல முறை கேட்டது என்றாலும் மறுபடி மறுபடி கேட்கத்தூண்டும் பேச்சு அவருடையது.

Santhalingam

IMG_0105

பிறகு அய்யா தொ.பரமசிவம் பேச ஆரம்பித்தார். சமணம் பற்றிய அவரது பார்வை மிகவும் வித்தியாசமானது. சமணம் ஒரு மதம் என்று நினைப்போர் பலருக்கும் அது ஒரு மதமல்ல, வாழ்வியல் நெறி என்று தெளிவாய் எடுத்துரைத்தார். அய்யாவின் பேச்சின் வீடியோ பதிவுகள் கிடைத்ததும் அதை இங்கே பகிர்கிறேன்.

IMG_0132

அதன் பிறகு அய்யா மஹ்மூத், தமிழிசை அறிஞர் முத்தையா, பேராசிரியர் கண்ணன், மதுரை காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் இ.கா.ப, பத்திரிக்கையாளர்கள் கவின் மலர், சுகிதா, கவிஞர் குட்டிரேவதி, பேராசிரியர் சுந்தர்காளி, பூவுலகின் நண்பர்கள் ஆர்.ஆர்.ஸ்ரீநிவாசன், கீழக்குயில்குடி ஊராட்சி மன்ற தலைவர், மற்றும் வந்தவாசியில் இருந்து வந்த சமணரான ஆனந்தராஜன் ஆகியோர் பேச விழா இனிதே நடந்தது. புகைப்படங்கள் கீழே.

IMG_0163

திரு.பாலகிருஷ்ணன், இ.கா.ப. அவர்கள்

Muthaiah

அய்யா முத்தையா அவர்கள். இடதுபுறம் அமர்ந்திருப்பவர் அய்யா மஹ்மூத் அவர்கள்.

sundarkali

பேராசிரியர் சுந்தர்காளி அவர்கள்.

anandharajan

அய்யா ஆனந்தராஜன் அவர்கள்.

IMG_0119

பேராசிரியர் கண்ணன் அவர்கள்.

இந்த உரைகளுக்கு இடையே நடந்த இன்னும் சில விஷயங்கள் கீழே:

“மதுர வரலாறு – சமண பெருவெளியின் ஊடே” என்னும் தலைப்பில் நூல் வெளியீடு நடந்தது. இந்த நூலை தொ.ப அய்யா வெளியிட சமண மலை அடிவாரத்தில் பருத்திப்பால் விற்கும் ஜெயமணி அம்மா பெற்றுக்கொண்டார்.

1184907_681257501903683_952403765_n

1236351_662090893819393_146591836_n

பசுமை நடை அமைப்பிற்கான புதிய இலச்சினையை காவல்துறை ஆணையாளர் திரு.பாலகிருஷ்ணன் வெளியிட திரு.மஹ்மூத் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

IMG_0151

பசுமை நடை ஓவியங்களை திரு.ரவி வெளியிட புகைப்பட கலைஞர் ஸ்ரீராம் ஜனக் பெற்றுக்கொண்டார்.

1240232_662091623819320_1717071973_n

இன்னொருபுறம் குழந்தைகளுக்கான முகாம் ஒன்றும் நடைபெற்றது. 168 குழந்தைகள் பங்கேற்ற இந்த நிகழ்வை சிறப்பாய் நடத்திய பசுமை நடை ஆர்வலர்களுக்கு எனது வாழ்த்துக்கள். மேலும், குழந்தைகளை ஊக்குவிக்க ஒரு சான்றிதழும் விளையாட்டு சாமான்கள் அடங்கிய ஒரு பையும் வழங்கப்பட்டது சிறப்பு. விளையாட்டுகள் அனைத்தும் பண்டைய தமிழ் விளையாட்டுகளாய் (கிட்டிப்புள், பம்பரம் போன்றவை) இருந்தது தனிச்சிறப்பு.

கீழே சில புகைப்படங்கள்:

IMG_0082

IMG_0086

IMG_0100

குழந்தைகள் செய்து வைத்த களிமண் பொம்மைகள்:

IMG_0232

சான்றிதழில் கையொப்பமிடும் சாந்தலிங்கம் அய்யா.

IMG_0174

நிகழ்வுகள் முடிந்த பின் மதிய உணவை அருமையான சாம்பார் சாதம், தயிர் சாதம், கூட்டு, அப்பளம் வழங்கப்பட்டது. உணவு அருந்திய பின் ஒவ்வொருவராய் கிளம்பிச்செல்ல பசுமை நடை உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து அந்த இடத்தில் சேர்ந்திருந்த குப்பைகளை எடுத்து மாநகராட்சி கழிவு சேகரிப்பு வாகனத்தில் சேர்த்தோம். பருத்திப்பால் அருந்திக்கொண்டே ஆல் நிழலில் அமர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் பேசி பிரிய மனமின்றி பிரிந்தோம்.

இந்த முறை மிகவும் சிறப்பாய் அமைந்தன சந்திப்புகள். தொ.பரமசிவம் அய்யாவை சந்தித்தது மகிழ்ச்சி. மேலும் ஆத்மார்த்தி அண்ணன், தோழி தீபா நாகராணி, நண்பர் கடங்கநேரியான், நண்பன் முத்துக்குமரன், தோழிகள் கவின் மலர், சுகிதா, மற்றும் குட்டி ரேவதி, சித்திரவீதிக்காரன் சுந்தர் என்று மனதுக்கு இனிமையான சந்திப்புகள்.

முத்துகிருஷ்ணன் இட்ட விதை இன்று மரமாய் எழுந்து நிற்கிறது. அது தோப்பாகி வனமாகி மக்கள் வாழ்வை வளமாக்க வாழ்த்துக்கள்.

மேலும் புகைப்படங்களின் தொகுப்பு இங்கே – ராஜண்ணா, செல்வம் ராமசாமி.

Smile

சீனி வெடி போடுங்கள்!

நீங்களெல்லாம் தீபாவளியை எவ்வாறு கொண்டாடுவீர்கள்? மன்னிக்கவும். வெடி போடாதீர்கள். அதனால் சுற்றுச்சூழல் கெடுகிறது, அதில் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி பிழிகிறார்கள், காசு கரியாகிறது என்றெல்லாம் சொல்லி உங்களை ஓட வைப்பது என் எண்ணமல்ல. வெடி தீபாவளியின் முக்கியமான ஒரு அங்கமாகும். போடுங்கள். ஏன் என்று கடைசியில் சொல்கிறேன்.

சிறுவயதில் இருந்து வெடி வெடித்தால் தான் தீபாவளி என்ற விஷயம் சால்னாவில் ஊறிக் கிடந்த பரோட்டா போல என் மனதில் ஊறிக் கிடந்தது. பள்ளிக்கல்வி முடியும் தருணத்தில் வெடி வெடிக்காவிட்டால் தான் கவுரவம் என்று மனதில் நினைத்ததுண்டு. எனக்கு கற்பிக்கப்பட்டது அப்படி. ஒரு பட்டாசின் பின்னால் உள்ள உழைப்பும் பயன்பாட்டு பொருளாதாரமும் விளங்காத அந்த வயதில் நான் அப்படி யோசித்தது தவறில்லை என்று நினைக்கிறேன்.

பணமற்று இருந்த நேரங்களில் கை நிறைய வெடிகளை சிலர் கொளுத்திக்கொண்டே இருப்பதை பார்ப்பேன். என் பட்டாசுகள் புஸ்ஸாகிவிடும். மனசு மட்டும் வெடிக்கும். பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நினைத்த வயதில் கையில் பணமில்லை. கையில் பணமிருக்கும் வயதில் பட்டாசு வெடிக்க மனமில்லை. இப்படியே தான் கடந்த பத்து வருடங்கள் கழிந்தன.

தீபாவளிக்கு ஒரு மாதம் முன்னமே சிறு சிறு பெட்டிக்கடைகளில் சிறுபட்டாசுகள் கிடைக்கும். ஒரு ரூபாய்க்கு பத்து என்று வாங்கி வெடிப்போம். தீபாவளி நெருங்க நெருங்க ஆவல் பெருகி அணைகட்ட முடியா அளவு பொங்கும் போது, வீட்டில் கேட்டு அழுது அதற்காய் அடி திட்டுகள் வாங்கி பிறகு அவர்களால் சமாளிக்க முடியாமல் காசை கொடுத்து வெடி வாங்கி தரும் அன்று ஜென்மம் சாபல்யம் அடையும். வெடி வாங்கினாலும் வெடிக்க முடியாது. தீபாவளி வரை அதை வைத்து அழகு பார்ப்போம். தீபாவளிக்கு முன் தினம் மெல்ல வெடிகள் போட ஆரம்பிப்போம். ஆர்வக்கோளாறில் தீர்த்து விடக்கூடாது. நேர மேலாண்மையையும் வள ஒதுக்கீட்டையும் அப்போதே நமக்கு சொல்லித்தந்தன வெடிகள்.

பிறகு வெடிகளை வகைப்படுத்தி வரிசைப்படுத்தி எந்த எந்த வெடிகளை முதலில் வெடித்து எவைகளை கடைசியில் வெடிக்க வேண்டும் என்ற பட்டியல் மனதினுள் தயார் செய்யப்படும். தனித்தன்மையான வெடி ஏதேனும் அதிர்ஷ்டவசமாக நமக்கு கிடைத்தால் அதுவே கடைசியாய் வெடிக்கப்படும் வெடியாய் இருக்கும். அதற்கு ஊரெல்லாம் சொல்லி நண்பர்கள் எல்லாம் கூடி அனைவரும் நோக்க பற்ற வைப்போம். சில நேரங்களில் அவை எதிர்பாராத பலன் தருபவையாக இருந்ததுண்டு. பகலானால் ஒலி தரும் வெடிகள். டாம் டூம் வெடிகள் அனைத்தும் அதிகாலை ஆரம்பித்து மாலை வரை வரும். இரவானால் ஒளி தரும் வெடிகள். வண்ணமயமாய் நம் வானை மாற்ற முனையும்.  இதற்க்கெல்லாம் மேலாய் சிறிது வெடிகள் பதுக்கப்படும். அவை கார்த்திகை தீபத்திற்காக.

வெடிகளை வெடிப்பதில் பல வகைகள். ஒரு சீனி வெடி பொட்டலம் வாங்கி வைத்துக் கொண்டு அதை ஒவ்வொன்றாய் வெடிப்பதில் நான் அன்று கண்ட சந்தோஷம் இன்று பல வண்ண வானவேடிக்கைகளை காட்டும் வெடிகளை வெடிக்கும் போது இல்லையே. நான் மிக விரும்பியவை சீனிவெடியும் ஓலை வெடியும் தான். வெங்காய வெடி கூட. என்ன இழவுக்கு அதை தடை செய்தார்கள் என்பது நியாபகமில்லை. சீனிவெடியை பிஜிலி வெடி என்று அசிங்கமாகவும் அழைப்பார்கள்.

அதுபோக குருவி வெடி, லட்சுமி வெடி, டபுள் ஷாட், செவன் ஷாட், அணுகுண்டு (“மூணு சுழி ண்-மா”, என் மனைவி பெயர் அனு. அவள் தப்பாக நினைத்துக்கொள்ள கூடாதே. முன்னெச்சரிக்கை), புல்லட் பாம், பாம்பு மாத்திரை, கார்ட்டூன் வெடிகள், சங்கு சக்கரம், ராக்கெட் என்றும் பலவும் வாங்கி வெடிக்க மனம் கிடந்தது தவிக்கும். லட்சுமி வெடியும் புஸ்வானமும், சங்கு சக்கரமும், சனியன் பிடித்த சாட்டையும் மட்டுமே கிடைக்கும். ராக்கெட் யாராவது ஓசியில் கொடுத்தால் உண்டு.

எங்கள் தெருவில் யாரிடம் சீனி வெடி பொட்டலங்கள் அதிகம் உண்டோ அவனே ராஜா! நிறைய சீனி வெடி பொட்டலங்கள் கிடைத்தால் அதிலேயே சிறு சரம் செய்து வெடிப்போம். சிறு சரம் என்றால் ரெண்டு மூணு சீனி வெடிகளை திரி கிள்ளி சேர்த்து சுற்றி பின் வெடிக்க விடுவது. முதல் வெடி வெடித்த பின் மற்றவை சிதறி கண்ட இடத்தில் வெடிக்கும். அதில் இருந்து தப்பிப்பதில் அலாதி இன்பம். பிறகு அவை சிதறி வெடித்ததால் கிடைக்கும் திட்டுக்களை தவிர்க்க அவற்றின் மேல் ஒரு சிரட்டையை கவிழ்த்தி வைப்போம். அது வெடித்து எவன் மேலாவது போய் விழுந்து தொலையும் போது எங்கள் வெடி வைபவம் ஒரு தற்காலிக முடிவை சந்திக்கும்.

அதிகாலை எழுந்து முதல் வெடி வெடிப்பது என்ன ஒரு சுகம். நாலு மணிக்கு எழுந்து எண்ணை வைப்போமா இல்லையோ வெடியை திரி கிள்ளி பற்ற வைப்போம். அடுத்த வீட்டுக்காரன் அலறி எழுவதில் அப்படியோர் ஆனந்தம் கண்டோம். இரவானால் மொட்டை மாடிக்கு போய் பணமுள்ளவர் வெடிக்கும் வான்வெடிகளை வேடிக்கை பார்த்தே பொழுது போகும். இன்றேன்னவோ மாலை முழுவதும் டிவியில் வரும் புதிய திரைப்படங்கள் ஆக்ரமித்து கொள்வதால் எனக்கு மொட்டை மாடிக்கு போக துணையொன்று இல்லை.

மாலை வரை திரி கிள்ளி திரி கிள்ளி விரல் நுனிகள் எல்லாம் கருப்படைந்து வெடி மருந்து அப்பிக் கிடக்கும். திரி கிள்ளாவிட்டால் வெடி சீக்கிரம் வெடித்து விடும். ஓட நேரம் இருக்காது. ராக்கெட்டுக்கு மட்டும் நான் திரி கிள்ள மாட்டேன். அதான் திரி மிகவும் மிருதுவானது. சற்று பலமாக இழுத்தால் கையோடு வந்து விடும். அப்பறம் ராக்கெட்டை ஷோ கேசில் தான் வைக்க வேண்டும். அணுகுண்டு திரியும் கிள்ளுவதில்லை. நீளம் அதனது திரி. கிள்ளி விட்டால் வெடிக்க ஒரு மாமாங்கம் ஆகும்.

இவையெல்லாம் என் மனதின் அடிஆழத்தில் ஒளிந்து கிடந்த நினைவுகள். வெடியோடு எனக்குள்ள தொடர்பை புதுப்பிக்க நான் உங்களுக்கு காரணம் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நான் சிறுவயதில் அனுபவித்த அந்த சிறு சிறு சுகங்களை என் பிள்ளைக்கும் கொடுக்க வேண்டும் என்பது நான் சிறுபிள்ளையாய் இருந்த காலத்தே செய்யப்பட்ட ஒரு முடிவாகும். ஆகையால், மிக யோசித்து இந்த தீபாவளிக்கு வெடி வெடித்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். நானும் என் உறவுகளும் சிவகாசிக்கு அருகே சென்று ஒன்பதாயிரம் ரூபாய்க்கு வெடிகள் வாங்கி வந்தோம். சீனி வெடி வாங்கவில்லை. அது என் பிள்ளை சற்று பெரியவன் ஆனதும் இருவரும் சேர்ந்து வெடிப்போம். இப்போதைக்கு அவனால் ஒழுங்காக பார்க்க ரசிக்க முடியாது. ஆனாலும் பழக்க வேண்டும். பொத்தி பொத்தி வைக்க பிள்ளை என்ன பாங்க்கில் வைத்த தங்கமா?

வெடி போடுங்கள். நாலு குடும்பம் நன்றாக வாழும். வாழ்த்தும். சுற்றுச்சூழல் கெடுமே என்ற போலி கவலை உங்களுக்கு வேண்டாம். அவ்வளவு அக்கறை இருந்தால் நெகிழித்தாள், வாகனம் போன்றவற்றை அதிகம் உபயோகிக்காமல் தண்ணீர், மின்சாரம், கல்நெய் சேமித்து வாழப் பழகவும். நீங்கள் ஒரு நாள் வெடி வெடித்து மகிழ்ந்தால் ஓசோனில் ஓட்டை விழுந்து விடாது. நீங்கள் மனிதப்பக்கிகளாக தனி மனித ஒழுக்கத்தை எல்லாவற்றிலும் பேணி வந்தால் இயற்கை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும். பட்டாசுக்கு மட்டும் ஏனிந்த மாற்றாந்தாய் மனப்பான்மை?

காசு கரியாகிறது என்பதெல்லாம் உங்கள் சாக்கு. பிள்ளைகள் சந்தோஷத்திற்கு முன் உங்களுக்கு காசு ஒரு கேடா?

பாதுகாப்பாய் வெடி போடுங்கள். வயதானவர்கள், கைக்குழந்தைகள், உடல்நிலை சரியில்லாதோர் அருகிலிருந்தால் தயவு செய்து ஒலி உண்டாக்கும் வெடி வகைகளை தவிர்க்கவும். காவல்துறை சொல்லும் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்கவும். உங்கள் பொறுப்பின்மையால் உங்களை காயப்படுத்திக் கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு. பிறரை காயப்படுத்தும் உரிமை யாருக்கும் அறவே கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெடி வாங்கும் காசை தானம் செய்கிறேன் என்று ஒருவர் வாய் சோற்றை பிடுங்கி இன்னொருவர் வாயில் போடாதீர்கள். தனித்தனியே கொடுங்கள். கை வலிக்காது.

அணு உலை தேவையா?

அணுஉலை ஆதரவும் எதிர்ப்பும் அற்ற மனநிலையிலேயே இருந்து வந்த நான், மக்களின் வீரியமிக்க போராட்டத்தின் வாயிலாகவும், அரசின் அடக்குமுறை போக்கிற்கு எதிராகவும், அனுஉலைகளால் ஏற்படும் ஆபத்துக்களை முழுக்க அறிந்து கொண்டதாலும், இன்று முதல் அணுஉலை எதிர்ப்பு நிலைப்பாடு எடுக்கிறேன்.

ஆயிரம் வழிகள் உண்டு ஆற்றலை பெருக்க. ஆயினும், அழிக்கும் அணுஉலைகளே ஒரே வழி என்னும் அரசின் வாதத்தை அறவே என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. அணுஉலைகளால் உலகெங்கும் நடந்துள்ள விபத்துக்களின் மூலம் பாதிப்படைந்த மக்களின் புகைப்படங்கள், பேட்டிகள், அறிஞர்களின் ஆய்வறிக்கைகள் எல்லாம் இருக்கும் போதும், அணு உலை ஒன்றே தீர்வு என்றும், அதற்கு மக்கள் வழிவிட வேண்டும் என்றும் கூறும் அரசின் கூற்றுக்கு, நியாயம் எங்கனம் கற்பிப்பது?

சூரிய சக்தி மூலம் மின்சாரம் பெருக்கி மற்ற மாநிலங்களுக்கு அதை விற்பனை செய்த குஜராத் ஒரு பக்கம். அந்த மின்சாரத்தை காசு குடுத்து வாங்கினாலும் அதை இங்கு எடுத்து வர இயலாத அளவுக்கு கட்டமைப்புள்ள தமிழ்நாடு மற்றொரு பக்கம். இந்தியாவில் பல மாநிலங்கள் மின்மிகை மாநிலங்கள். அவை அணுசக்தியால் அந்த நிலையை அடையவில்லை.

ஆகையினால், அணு உலை ஒன்றே தீர்வு என்று கூறும் இந்த மத்திய அரசின் போக்கும், அதை ஆதரிக்கும் மாநில அரசின் கொள்கையும், தரகின் பாற்பட்டது என்றே நான் அவதானிக்க வேண்டியுள்ளது. அணு உலைகளை பற்றி நான் சில காலமாய் படித்து வந்த போதிலும், ஒரு ஆதரவு நிலையோ, இல்லை எதிர்ப்பு நிலையோ எடுக்கும் முன், அதை பற்றிய எனது அறிவை செறிவு செய்து கொண்டு, பிறகு ஒரு முடிவு எடுப்பதே சிறந்தது என்று நான் அனுமானித்தேன். அதன் பொருட்டு, பல புத்தகங்கள், பல கருத்தாய்வுகள், பல கட்டுரைகள் படித்து விட்டே இந்த எதிர்ப்பு நிலையை நான் எடுக்கிறேன்.

20 வருடங்கள் கழித்து, தமிழகம் சுடுகாடாய் போக வேண்டிய நிலைமை வரலாம். அணு உலையில் விபத்தென்றால், அதற்கு இழப்பீடு தரப்படும் என்றால், அதை வாங்கி வைத்து, அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட நிலத்தில் வைத்து என் செய்வது? யார் செய்வது?விவசாயமா? நடவா? மீன் வளர்க்கவா? ஆடு வளர்த்தாலும் அது வளருமா? அதன் வளர்ச்சி வரம்பிற்குட்பட்டு இருக்குமா? இயற்கை இதையெல்லாம் தாங்குமா?

நாம் எது செய்தாலும், அதை விற்க முடியாது. அதுவே நிஜம். இழப்பீடு என்பது ஒரு கண்துடைப்பே. அதை ஒருவரும் தரப்போவதில்லை. அதை பெறவும் ஒருவரும் இருக்கப்போவதில்லை.

பிற முறைகளில் மின்சாரம் தயாரிப்பதில் நாம் நம் கவனத்தை செலுத்தினால், நிலைமை மாறலாம். அணு உலை வேண்டாம் என்ற எண்ணம் நிறைவேறலாம். அதுவரை, போராட்டமே வழி.

நான் இதற்காக படித்த சில புத்தகங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அனைத்தையும் எங்கேனும் பதிவேற்றி விட்டு அந்த முகவரியை பகிர்கிறேன். நன்றி.

ஆந்தை – ஒரு விந்தை!

சென்னை ட்ரெக்கிங் கிளப்போட ஒரு நாள் நாகலாவுக்கு ட்ரெக்கிங் போயிருந்தேன். அங்க போனப்போ கார எல்லாம் ஒரு நல்ல பெரிய மாங்கா மரத்தடில நிறுத்திட்டு அப்பறம் உள்ள நடந்து போகணும்.

வண்டிய நிறுத்திட்டு சாப்பாட எல்லாரும் எடுத்து வச்சிட்டு இருந்தப்போ யாரோ கூப்பிட்டு ஒரு குட்டிப்பறவை விழுந்து கெடக்குன்னு சொன்னாங்க. அங்க போய் பாத்தா அது ஒரு ஆந்தை. சின்ன ஆந்தை. கூட்டுல இருந்து கீழ விழுந்து கெடந்துச்சு.

ஒடம்பு பூரா ஒரே எறும்பு (Fire ants). அத மெல்ல கைல எடுத்து ஒவ்வொரு எறும்பா எடுக்க ஆரம்பிச்சேன். முழுசா எடுத்து முடிக்கிறதுக்குள்ள எறும்புங்க என் கையையும் ஒரு கை பாத்துருச்சுங்க. ரெக்கைக்குள்ள கூட எறும்புங்க கடிச்சு வச்சதாலே ஆந்தை ரொம்ப மோசமான நிலைமைல இருந்துச்சு.

மெல்ல கைல எடுத்துகிட்டே மலைக்குள்ள போயிட்டோம். ஆந்தை பகல்ல ரெஸ்ட் எடுக்குங்கிறதாலே என்னோட கேமரா பைக்குள்ள அத விட்டுட்டோம். சாயங்காலம் மறுபடி மாங்கா மரத்துக்கு வந்த அப்பறம் அந்த குட்டி ஆந்தைய அதோட கூட்டிலேயே விட்டுரலாம்ன்னு முடிவு பண்ணினோம். எவ்வளவோ முயற்சி பண்ணியும் அதோட கூட்ட கண்டுபிடிக்கவே முடியல. அங்கேயே விட்டுட்டு வந்த மறுபடி அது எறும்புக்கு இரையாகிடும்ன்னு கைல வச்சிட்டே சென்னை வரைக்கும் கொண்டு வந்துட்டோம்.

வீட்டுக்கு வந்த அப்பறம் தான் ஆந்தைக்கு எதாச்சும் சாப்புட குடுக்கணும்னு தோணுச்சு. அது ராத்திரி ஆன ஒடனே கத்த ஆரம்பிச்சுது. சரின்னு சொல்லி ரெண்டு கட்டெறும்ப பிடிச்சு போட்டோம். லபக் லபக்ன்னு சாப்பிட்டுச்சு. ஆந்தைக்கு தண்ணி குடுக்கணும்னு ஒரு கிண்ணியில தண்ணி வச்சா அது அத சீண்டக்கூட இல்ல. என்னடா இது.. ஒரு ஆந்தைய கொன்ன பாவம் நமக்கு வேண்டாமுன்னு அத வலுக்கட்டாயமா பிடிச்சு வாய தெறந்து தண்ணிய ஒரு சிரிஞ்சு வச்சு உள்ள ஊத்தினோம். அதுக்கு அப்பறமும் அது கத்திக்கிட்டே இருந்துச்சு. எங்ககிட்ட எறும்பு தீந்து போச்சு. அதனால அது புழு தான் சாப்பிடும்னு ஒரு அனுமானத்துல கொஞ்சம் நூடுல்ஸ வேக வச்சு அது கிட்ட குடுத்தோம். அது லேசா தின்னு பாத்துட்டு மூஞ்சிலே துப்பிடுச்சு.

இது என்னடா சாமி மதுரைக்கு வந்த சோதனைன்னு மனோஜ் ஏதோ பழம் எல்லாம் வெட்டி போட்டான். அத அது திரும்பிக் கூட பாக்கல. அடப்போப்பான்னு ஆந்தைய அப்பிடியே விட்டுட்டு நாங்க தூங்கிட்டோம். காலைல எழுந்து பாத்த அது சாச்சு வச்ச பாயிக்கு பின்னாடி போய் ஒளிஞ்சுகிச்சு. சரி இனிமே இதுக்கு ராத்திரி தான் சாப்பாடு தேவைப்படும்னு அது என்னதான் திங்கும்ன்னு கூகிள் போட்டு பாத்தோம். அங்கதான் செம மொக்க வாங்கினோம்.

ஆந்தை புழு, பூச்சி, மற்றும் சில வகை அசைவ உணவுகள் மட்டுமே சாப்பிடும்னு போட்டுருந்தான். அத விட முக்கியமான விஷயம். ஆந்தை தண்ணியே குடிக்காதாம். அதுக்கு தேவையான தண்ணிய அது சாப்பிடுற உணவுல இருந்தே எடுத்துக்குமாம். ஆஹா இது தெரியாம ஒரு அப்பாவி ஆந்தைய அந்தலசிந்தல பண்ணிட்டமோன்னு ஒடனே கெளம்பி போய் கொஞ்சம் ஈரலும் கொஞ்சம் மீனும் வாங்கிட்டு வந்தோம்.

ராத்திரி ஆச்சு. ஆந்தை அப்போ தான் பாய்க்கு பின்னால இருந்து வெளிய வந்துது. அத பிடிச்சுட்டு வந்து அதுக்கு பக்கத்துல ஈரல எடுத்து வச்சோம். கோரபசில இருந்துச்சு போல. கண்ண மூடி திறக்குரதுக்குள்ள பூராத்தையும் தின்னுடுச்சு. மீனும் அப்பிடித்தான். போயே போச்சு.

அப்பறம் தான் எங்க அலப்பறை ஆரம்பமாச்சு. எனக்கு தெரிஞ்ச எவனும் ஆந்தை வளத்ததில்ல. நானும் மனோஜும் பண்ண அலப்பறைல ஆந்தையாருக்கு விருந்தாளிகள் நெறைய வந்துட்டாங்க. அலெக்ஸ், ராம், மற்றும் பலர் அங்க வந்து போட்டோ எடுத்துட்டு போனாங்க. அந்த ஆந்தைக்கு என்ன பேரு வைக்கலாம்ன்னு யோசிச்சுட்டே இருந்தோம். அவ்ல் (Owl) அப்பிடிங்கிற பேர கொஞ்சம் தமிழ்ப்படுத்தி அவுலாண்டின்னு பேரு வச்சிட்டோம்.

Rajanna Photography-1-40

அவரு காலைல எல்லாம் அமைதியா எதாச்சும் இருட்டான எடத்துல போய் ஒளிஞ்சுப்பார். ராத்திரி ஆனா தான் அவரு ரவுசு ஆரம்பிக்கும். ராத்திரி பூரா கத்திகிட்டு, அங்க இங்க சுத்திகிட்டே இருக்கும். அது ரொம்ப குட்டிங்கிறதாலே அதாலே பறக்க முடியல. நானும் இது நம்ம உருளுறப்போ நடுவுல மாட்டினா நசுங்கிடுமேன்னு அத ஒரு டப்பாக்குள்ளே வச்சுட்டு என் லேப்டாப்ப அதுக்கு மேல வெயிட்டு வச்சிட்டு படுப்பேன். அந்த பிக்காளி லேப்டாப்ப தள்ளி விட்டுட்டு ராத்திரி நம்ம தலைமாட்டுல நின்னுட்டு கத்தும். முடியல.

இதுக்கு நடுவுல அவுலாண்டி கொஞ்சம் கொஞ்சம் பறக்க ஆரம்பிச்சார். காத்தாடி போட்டா அடி பட்டுடுமேன்னு காத்தாடி போடாம, AC மட்டும் போட்டுட்டு தான் ரெண்டு நாள் தூங்கினோம். மெல்ல மெல்ல அவரு நல்லாவே பறக்க ஆரம்பிச்சார். ஒரு நாள் நான் ஆபிஸ்ல இருந்து வந்து அவர தேடினேன். காணவே இல்ல. மனோஜுக்கு போன் பண்ணி கேட்டா அங்கதாண்ணெ இருந்துச்சு அப்டின்னான். எங்க தேடியும் கிடைக்கல.

எனக்கு ரொம்ப சங்கடமா போச்சு. சொல்லாம கொள்ளாம பறந்து போயிட்டானேன்னு ரொம்ப வருத்தம். ஆனாலும் அந்த ஆந்தை பொழைச்சுருக்கும் ஒரு நம்பிக்கை. அதுக்கு அப்பறம் அந்த ஆந்தைய நான் பாக்கவே இல்ல.

இன்னைக்கும் நான் வீட்டுல ஆந்தை வச்சிருந்தேன்னு சொன்னா நெறைய பேரு நம்புறதில்லை. அவங்களுக்கு ஆந்தை ஒரு விந்தை. எனக்கு அது இன்னொரு பறவை. ஒரு உயிரை காப்பாத்தணும்னா இன்னும் ஆயிரம் ஆந்தைக்கு கறி வாங்கிப் போட நான் ரெடி. ஆந்தை தான் தேடி வரணும். வரும்.