கற்கள் அழிவதில்லை, மனிதன் அவற்றில் ஒரு வீட்டின் தரைத்தளத்தை பார்க்கும் வரை. மதுரையை சுற்றி இருக்கும் எண்ணற்ற மலைகள் பல்லாயிரம் வருடங்கள் தாண்டி நிமிர்ந்து நின்றவை. இருபது வருடங்களில் அவற்றின் பாரம்பரியத்தையே அழித்து ஒழித்து விட்டார்கள். சமண தீர்த்தங்கரர்கள் சிலர் செய்த புண்ணிய காரியத்தால் சில மலைகள், சில மலைகளின் பகுதிகள் பிழைத்து இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் பெருமாள் மலை.
மதுரையில் இருந்து தேனி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் மதுரை காமராசர் பல்கலைகழகத்துக்கு சற்று முன்னரே பில்லர் சாலை தாண்டிய சில மீட்டர்கள் தூரத்தில் சாலை இடது புறம் திரும்புகிறது. உற்று நோக்காவிடில் தேனிக்கு பயணப்பட்டு விடலாம். சமணச்சின்னம் பெருமாள்மலை என்ற மஞ்சள் நிற பதாகை ஒன்று சாலையின் உட்திரும்பியவுடன் காணக்கிடைக்கும்.
மேலும் ஒரு கிலோமீட்டர் உள்ளே சென்றால் முத்துப்பட்டி கிராமத்துக்கு செல்லும் வழி கிடைக்கும். அங்கே பாண்டவ மலை, பெருமாள் மலைக்கு செல்லும் வழி கேட்டால் எவரேனும் சொல்லி விடுவார்கள். மனித ஆக்கிரமிப்பில் கரைந்தது போக மிச்சமுள்ள மலையை காணலாம். மலையின் பின்புறம் நடந்து சென்றால் அங்கே சமணர் குகையோன்றை காணலாம்.
இருபதுக்கும் மேற்பட்ட படுகைகள் வெட்டப்பட்ட மலைக்குகையின் வெளிப்புறத்தில் இருந்து இரண்டு தீர்த்தங்கரர்கள் மதுரையை பலநூறு ஆண்டுகளாக பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். உள்ளே கொஞ்சம் மண்டை உடைக்கப்பட்ட மகாவீரர் சிலையாக அமர்ந்து அர்த்தபரியன்காசனத்தில் தியானித்து இருக்கிறார். அநேகமாக மகாவீரரின் தனிச்சிற்பம் இந்த ஒரு மலையின் தான் காணப்படுகிறது என்று கருதுகிறேன். வேறு எங்கும் இது போல தனி சிற்பத்தை கண்டதில்லை.
தீர்த்தங்கரர்களுக்கு கீழே இரண்டு வட்டெழுத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கி.பி 8-9ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படும் இந்த கல்வெட்டுகளில் இருக்கும் வரிகள் கீழ்வருமாறு:
’ஸ்வஸ்திஸ்ரீ பராந்தக பருவதமாயின ஸ்ரீ வல்லபப் பெரும்பள்ளிக் குறண்டி அஷ்டோபவாசி படாரர் மாணக்கர் மகாணந்தி பெரியார் நாட்டாற்றுப்புறத்து நாட்டார்பேரால் செய்விச்ச திருமேனி‘
’ஸ்வஸ்திஸ்ரீ வெண்புணாட்டுக் குறண்டி அஷ்டோப வாஸி படாரர் மாணாக்கர் குணசேனதேவர் மாணாக்கர் கனகவீரப் பெரியடிகள் நாட்டாற்றுப்புறத்து அமிர்த பராக்கிரம நல்லூராயின குயிற்குடி ஊரார் பேரால் செய்வித்த திருமேனி பள்ளிச் சிவிகையார் ரக்ஷ‘
குரண்டி என்ற ஊரில் இருந்த பள்ளியை சேர்ந்த மாணவர் ஒருவர் இதைச் செய்ததாக கருதலாம். குரண்டியில் சமணர்களின் பெரும்பள்ளி இருந்திருக்கவும், அப்பள்ளியில் நிறைய மாணவர்கள் பயின்றிருக்கவும் கூடும். குரண்டியின் அக்காலப்பெயர்தான் பராந்தக பர்வதம். இன்னொரு கல்வெட்டில் கீழ்குயில்குடி ஊரார்க்காக குரண்டிப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் செய்திருக்கலாம்.
திடிக்காத்தான் {ம}….னம் எய்…’ குகைத்தளத்தின் கற்படுக்கையில் காணப்படும் இக்கல்வெட்டு கி.பி முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். திட்டியைக்காத்தான் என்பவன் செய்வித்து தந்த கற்படுகையாக இருக்கலாம். இக்கல்வெட்டு சிதைந்து காணப்படுகிறது.
’நாகபேரூரதைய் முசிறிகோடன் எளமகன்’ சிறுகுகைத் தளத்தில் கற்படுக்கையின் மீது தலைகீழாக இடவலமாக காணப்படும் இக்கல்வெட்டு கி.மு முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். நாகப்பேரூர் என்பது இப்பகுதியில் உள்ள நாகமலைப் புதுக்கோட்டையைக் குறிக்கும். முசிறி என்பது சேரர் துறைமுகப்பட்டிணத்தைக் குறிக்கும். இன்றைய கேரள மாநிலத்திலுள்ள முசிறியைச் சேர்ந்த இளமகன் கோடனும், நாகபேரூரின் தலைவரும் செய்துகொடுத்த கொடை எனப் பொருள் கொள்ளலாம்.
குகைத்தளத்தின் மேல் பகுதியில் மற்றொரு தமிழ் பிராமி கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. “சையஅளன் விந்தையூர் காவிய்” என சொல்லப்பட்டுள்ள கல்வெட்டும் கிமு முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாய் இருக்கக்கூடும். விந்தையூர் என்பது தற்கால வண்டியூரை குறிக்கலாம்.
குகைத்தளத்தை பார்வையிட்ட பிறகு அனைவரும் ஒருசேர அமர, சாந்தலிங்கம் அய்யாவின் சொற்பொழிவு நிகழ்ந்தது. மேற்குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் அவரது சொற்பொழிவில் இருந்தும் சித்திரவீதிக்காரனின் முந்தைய பயணகுறிப்பு பதிவிலிருந்தும் திரட்டப்பட்டவையே ஆகும். பெருமாள்மலை என்ற பெயர் கொஞ்சமாய் உறுத்த சமணர்கள் கழுவேற்றப்பட்ட நிகழ்வையும் சைவம் வைணவம் மெல்ல தலையெடுத்த வரலாற்றையும் அசை போட்டுக்கொண்டே யோசிப்பின் அந்த பெயரின் காரணம் மெல்ல புலப்படும்.
தீபாவளி நெருங்கி வரும் வேளையில் மற்றொரு குறிப்பு உங்களுக்கு அவலாக கிடைக்கக்கூடும். நாம் கொண்டாடும் தீபாவளி சமண தீர்த்தங்கரர்களில் முக்கியமானவரான வர்த்தமான மகாவீரர் மரணித்த நாள் தான். நரகாசுரனை கொன்ற நாள் என்று நம்மை கொண்டாட வைத்திருக்கிறார்கள். மேலும் ஆவலாய் இருந்தால் தொ.பரமசிவன் அய்யா எழுதிய “அறியப்படாத தமிழகம்” படியுங்கள்.
1030வது சதய விழா நாயகனான சிவபாதசேகரனுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்..
நன்றி.