மெட்ராஸ் – கேள்விகள் சில

madras-movie-poster

விமர்சனம் இல்லை. ஒரு பார்வை மட்டுமே.

சில நாட்களுக்கு முன் ‘மெட்ராஸ்’ பார்த்தேன். வழக்கமான அரசியல் படம் தான். ஆனால் பா.ரஞ்சித் அந்த அரசியலை வைத்திருக்கும் இடம் மிகவும் முக்கியமானது.

பார்க்க ஆரம்பித்த உடன் முதலில் நினைவுக்கு வந்தது பாரதிராஜாவின் ‘என் உயிர் தோழன்!’ கார்த்தியின் அம்மாவாக வரும் ரமா அதில் அறிமுகம் ஆனார். ஏ ராசாத்தி ரோசாப்பு பாடலில் தென்னவனோடு இவர்தான் நடித்திருப்பார். அதை மனதில் இருந்து நீக்கி விட்டு பார்க்க ஆரம்பித்தேன்.

நான் இன்ன சாதி என்று ஒருவன் சொல்ல வேண்டாம். அவனது நடை உடை பாவனைகளிலேயே அவன் சாதியை அனுமானிக்கும் சமூகம் இது. பெயரை வைத்து, இருக்கும் இடத்தை வைத்து, சொந்த ஊரை வைத்து சாதி கண்டுபிடிப்பார்கள். நம் சமூகத்தின் வேர்களில் புரையோடிப்போயிருக்கும் சாதீய வன்மம் எல்லா மனிதர்களிடமும் கொஞ்சம் மிச்சம் இருக்கவே செய்கிறது.

மெட்ராஸ் படத்தின் கதாநாயகி எனக்கு அப்படித்தான் தெரிந்தாள். அவள் அந்த பாத்திரத்துக்கு பொருத்தமானவள் அல்ல என்று கட்டியம் கூறியது என் மனது. பாக்க சேட்டு பொண்ணு மாதிரி இருக்கே.. என்பதுதான் என் மனதில் முதலில் தோன்றிய எண்ணம். இதற்கு பல்வேறு காரணிகள் இருக்கலாம். முதல் காரணி, மெட்ராஸ் பார்க்கும் முன் நான் “இத்தரஅம்மாயிலதோ” என்றோர் தெலுகு படத்தை பார்த்தேன். அதில் இதே நாயகி (கேத்ரீன் தெரேசா) ஒரு மத்திய அமைச்சரின் மகளாய் வந்து அல்லு அர்ஜூனை விழுந்து விழுந்து காதலிப்பார். ஒருவேளை அதை பார்த்து பின் உடனே மெட்ராஸ் பார்த்த காரணமோ என்னவோ அந்த கதாநாயகி வடசென்னையில் பிறந்து வளர்ந்தவள் என்ற பாத்திர படைப்பு சற்றும் ஒட்டவில்லை. இரண்டாம் காரணி, வெள்ளை தோல் பெண்கள் குறிப்பிட்ட இடத்தில் இல்லை என்பதில்லை. இப்படி யதார்த்தமாய் பதிவு செய்த ரஞ்சித்துக்கும் ஒரு வெள்ளை தோல் நாயகி தேவைப்படுகிறாளே என்ற சலிப்பாய் கூட இருக்கலாம்.  அடிப்படை மக்கள் வாழ்வியலை அழுத்தமாய் பதிவு செய்யும் இந்த படத்திலும் நாயகி வெள்ளையாய் இருக்க வேண்டும் என்ற விதி ஏன்? நாயகி கருப்பாய் இருந்தால் கார்த்தி காதலிக்க மாட்டாரா? மூன்றாம் காரணி, என்னுள் இருக்கும் சாதீய எச்சமாய் இருக்கலாம்.

வடசென்னையின் பல பகுதிகளில் அலைந்து திரிந்தவன் என்ற முறையில் ரஞ்சித்தின் பாத்திர படைப்பிலோ வாழ்வியல் உருவாக்கத்திலோ வேறு எந்த குறைகளையும் என்னால் காண இயலவில்லை. புளியந்தோப்பின் நெரிசல் மிகுந்த சாலைகளையும் வியாசர்பாடியின் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளிலும் மாஞ்சா போட்ட நூல்களிலும் புகுந்து செல்லும் கதைக்களம் அது. அதனுள் இருக்கும் அரசியலை நுணுக்கமாய் விவரித்ததில் மெட்ராஸ் வெற்றி பெறுகிறது.

ஆயினும் அன்பு கொலை செய்யப்பட்ட பின் நடக்கும் தனி மனித பழிவாங்கல் வழக்கமான திரைப்படமாய் மெட்ராசை சுருக்கி விட்டது. அதுவும் கொலைகள் பல செய்து விட்டு கடைசியில் கார்த்தி குழந்தைகளுக்கு போதிப்பது போல் காட்டுவது எப்படி யதார்த்தமாகும்? வடசென்னை மட்டும் அல்ல. பல்வேறு ஊர்களில் இருக்கும் வன்முறையில் வாழ்க்கையை நடத்தும் கும்பல் எதுவும் தனிப்பட்ட ஒருவனின் மரணத்தோடு முடிந்து விடுவதில்லை. மாரிக்கு ஒரு விஜி இருந்தது போல் விஜிக்கு ஒருவன் இருப்பான். அன்புவிற்கு ஒரு மாரி இருந்தது போல் கார்த்திக்கு ஒருவன் இருப்பான். பழிவாங்குதல் அவனுக்கு நேராமல் இருக்க வேண்டுமானால் அவன் எதிரிகளை மொத்தமாய் கருவறுக்க வேண்டும்.

மாரியின் மனதை மாற்றுவதன் மூலம் அன்பின் சாவுக்கு காரணமாய் இருந்தது கண்ணன். ஆனால் கடைசி வரை கண்ணனை எதுவும் செய்ய வேண்டும் என்று காளிக்கு தோன்றவே இல்லை. கண்ணன் தானே அந்த சுவரின் அரசியலுக்கு ஆணிவேர். கண்ணனை ஏற்கனவே கொல்ல முயற்சித்தவன் காளி. கண்ணன் சும்மா இருப்பானா?? விஜியும் காளியின் எதிரிதான்.

இதே கதைக்களம் தொடர்ந்திருந்தால் காளியும் கொஞ்ச நாட்களில் இறந்திருப்பான். கொன்று போட்டிருப்பார்கள். கலையரசி அழுது கொண்டே பிள்ளையிடம் அப்பன் சாவுக்கு பழிவாங்கிட்டு தான் கண்ணாலம் கட்டுவேன்னு எந்தலையில அடிச்சு சத்தியம் செய்யுடா! என்று கேட்பது போல் படம் முடிந்திருக்கும்.

ஆனாலும் வடசென்னையின் வாழ்க்கையை, வன்முறையை, அரசியலை அழுத்தமாய் பதிவு செய்தமைக்கு என் வாழ்த்துக்கள் ரஞ்சித். அடுத்த படைப்பு இன்னும் யதார்த்தமாய் உன்னதமாய் அமைய வாழ்த்துக்கள்.

Leave a comment