தலப்பாகட்டி பிரியாணி தெரியுமா? இது அதுவல்ல. இது தாலாட்டு பற்றியது. தாலாட்டு என்றால் குழந்தையையோ குழந்தை மனமுடைய என்னைப் போன்ற பெரிய குழந்தையையோ தூங்க வைக்க அம்மாக்களோ இல்லை என்னை போன்ற அப்பாக்களோ பாடும் ஒரு பாடல். தமிழ் விக்கிஷனரியில் பார்த்து சரியான விளக்கம் அளிக்க மனம் ஒப்பவில்லை. ஏனெனில் நீங்கள் எப்படியும் நான் எழுதிய மேற்கூறிய விளக்கத்தை கூகிளில் சரி பார்ப்பீர்கள் அல்லவா?
தாலாட்டு பாடுவது ஒரு கலை. எல்லாரும் தாலாட்டு பாடிவிட முடியாது. தாலாட்டு பாட மிக முக்கியமான தகுதி ஒன்று உண்டு. நீங்கள் அப்பாவாகவோ இல்லை அம்மாவாகவோ இருக்க வேண்டும் என்பதல்ல. உங்கள் காந்தக்குரலில் சிக்குண்டு அந்த குழந்தை உறங்க வேண்டும். கட்டைக்குரலில் தாலாட்டுப் பாடி குழந்தை தொட்டிலில் இருந்து இறங்கி ஓடுமாறு செய்தீர்களானால் தாலாட்டு பாடும் தகுதியை நீங்கள் இழந்தவர் ஆவீர்கள்.
நான் உயிர் வாழ்வதற்கு கோழிக்குழம்பு எவ்வளவு அவசியமாகிறதோ அவ்வளவு அவசியம் குழந்தையின் தூக்கத்திற்கு தாலாட்டு. கோழிக்குழம்பின் ருசி அறிந்து அடங்கும் பசி போல இனிமையான தாலாட்டு கேட்டு அடங்கும் குழந்தையின் அழுகை. தாலாட்டு பாடினால் குழந்தை மட்டும் தான் தூங்கும் என்பதல்ல. நானும் தூங்குவேன். நீங்கதான் சார் அந்த குழந்தையே என்று வியப்போர்க்கு – நான் குழந்தையல்ல.
பிறந்த குழந்தைக்கு தாலாட்டு பாடி உறங்க வைக்கும் பழக்கம் இன்று சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. எனக்கு என் அம்மா பாடிய தாலாட்டு ஞாபகம் இல்லை. அவ்வளவு சிறிய பிள்ளையாக இருக்கும் போது அதை எப்படி ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும். இன்று என் பிள்ளைக்கு தாலாட்டு பாட வேண்டும் என்று ஆசை. ஆனால் நான் தகுதி இழந்தவன் ஆகிறேன். என் கட்டைக்குரல் கேட்டால் குழந்தை என்னை கட்டையால் அடித்து விரட்டியே விடுவான்.
அவன் அம்மாவை (என் மனைவி) பாட சொன்னேன். அவளுக்கு தாலாட்டு பாட தெரியவில்லை. சிறுத்தை படத்தில் வரும் ஆராரோ ஆரிரரோ என்னும் தாலாட்டை அவளது அலைபேசியில் ஓட விட்டு தூங்க வைக்கிறாள் குழந்தையை. அவ்வளவு செய்கிறாளே. மகிழ்ச்சி. அவள் அந்த பாட்டை பாட விட்டால் முதலில் தூங்குவது நானே. இவ்வளவு கஷ்டப்படுகிறாளே என்று கூகிளில் தாலாட்டு என்று தேடித் பார்த்தேன். அனைத்தும் சினிமா பாடல்களே. சில இடங்களில் சில கிடைத்தாலும் அந்த ஆராரோ ஆரிராரோ கேட்டால் தான் தூங்குகிறான் பிள்ளை.
தாலாட்டு ரொம்ப முக்கியம். நாம் அதை ஒரு வலைப்பதிவில் சேர்த்து வைக்க வேண்டும். வருங்கால அப்பன்களுக்கு அது ரொம்பவும் தேவைப்படும். தாலாட்டு பாடல்கள் கிடைக்காமல் நான் தவித்த தவிப்பு வேறு எந்த அப்பனுக்கும் வரக் கூடாது என்று நான் அந்த ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். என்னைப்போல் கஷ்டம் அறிந்த அப்பன்கள் இதற்கு முன் இதை செய்திருக்கலாம். செய்யாமல் போய் விட்டனர். தாலாட்டுப் பாடல்களின் சிறப்பை பல இடங்களில் சிறப்பாக புரிய வைத்துள்ளனர் சான்றோர். கீழ்க்காணும் கவிதையில் அதன் சிறப்பை தெளிவாய் காணலாம்.
தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை – அந்த
பாட்டுக்கு நான் அடிமை
தாய் போலே இங்கு வேறாரு – நம்
தாய் போலே இங்கு வேறாரு
தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை – அந்த
பாட்டுக்கு நான் அடிமை
ஆவாரங் காடெல்லாம் நீரோடும் தோப்பெல்லாம்
யாராரு வேலை செய்வதாரு
பூவாரம் கேட்டானா பொன்னாரம் கேட்டானா
சோறுக்கு வேண்டி நிக்கும் பேரு
பொன் மின்ன வெள்ளி மின்ன வைரங்கள் மின்ன
தொழிலாளி கைகள் படத்தான் வேண்டும்
தாய் உண்ண சேய்யும் உண்ண நாமென்றும் உண்ண
விவசாயி தான் உழைக்க வேண்டும்
ஏழை அவர் பாடு அது காற்றோடு போயாச்சு
ஏரோட்டி போனாலே எல்லோர்க்கும் சோறு
சோற்கேட்டு போவானே அவன் பாடும் பாட்டு
பாட்டுக்கு நான் அடிமை – அந்த
பாட்டுக்கு நான் அடிமை….
நாடாலும் பேரென்ன மாடோட்டும் பேரென்ன
யாராரு உன்னை பெத்ததாரு
விஞ்ஞானி ஆனாலும் மெஞ்ஞானி ஆனாலும்
தாய்தானே பெத்து போட்டா கூறு
பகலென்ன இரவும் என்ன என்றென்றும் இங்கே
ஆணுக்கு பெண்ணின் துணை வேணும்
வெயிலென்ன மழையும் என்ன காலங்கள் தோறும்
அன்புக்கு தாயும் இங்கு வேணும்
தாய்தான் படும் பாடு அதை உணர்வாயே கண்மணி
தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை – அந்த
பாட்டுக்கு நான் அடிமை
தாய் போலே இங்கு வேறாரு – நம்
தாய் போலே இங்கு வேறாரு.
பின்குறிப்பு: உங்களுக்கு வட நாட்டு பாடல்கள் வேண்டுமெனில் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய வாத்சல்யம் என்னும் ஆல்பம் இணையத்தில் கிடைக்கிறது. மேலும் ஆங்கில குழந்தையாய் உங்கள் குழந்தையை வளர்க்க வேண்டிய நிர்பந்தத்திற்கு நீங்கள் உட்பட்டிருப்பின் கூகிளில் “Lullaby” என்று தேடவும். நிறைய தரவிறக்கலாம்.
அப்பப்பா… எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளீர்கள்… நல்லதொரு பாடல் வரிகளுக்கு நன்றி… (பழைய தாலாட்டு பாடல்கள் குழந்தைகள் கேட்பதில்லை- அடிக்க வருவார்கள்…)
நம்மதாண்ணே அப்புடி நெனைக்கிறோம்.. புள்ளைங்களுக்கு அதெல்லாம் தெரியாதுல்ல.. எத பாடினாலும் கேட்டு தானே ஆகணும். 🙂
மிக நல்லதொரு பதிவு! படித்து மகிழ்தேன்! இதோ அந்தக் கவிதை, பாடல் வடிவில் – அனைவரும் கேட்டு உணர்ந்து மனம் நிறைய: http://www.youtube.com/watch?v=71h_aU1-K9o
மிக்க நன்றி சார். நான் கொஞ்சம் நையாண்டி பண்ணி தான் அதை கவிதைன்னு சொன்னேன். 😀
இந்த பாட்டு இருக்கதும் எனக்கு தெரியும். 🙂 நம்ம ராமராஜன் பாட்டை மறக்க முடியுமா? ஆனாலும் ரொம்ப நன்றி பின்னூட்டத்திற்கு.
ஆரடித்தார் ஏனழுதாய்
அடித்தாரைச் சொல்லியழு
கண்ணே என் கண்மணியே
கடிந்தாரைச் சொல்லியழு!
விளக்கிலிட்ட வெண்ணையைப் போல்
வெந்துருகி நிற்கையிலே
கலத்திலிட்ட சோறது போல்
கண்கலக்கந் தீர்த்தாயே!
கொப்புக் கனியே
கோது படா மாங்கனியே!
வம்புக் கழுதாயோ
வாயெல்லாம் பால்வடிய;
மாமன் அடித்தானோ
மல்லிகைப்பூச் செண்டாலே!
அத்தை அடித்தாளோ
அல்லி மலர்ச் செண்டாலே!
அடித்தாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் செய்துவைப்போம்
தொட்டாரைச் சொல்லியழு
தோள்விலங்கு போட்டு வைப்போம்.
வெண்ணெயால் விலங்குபண்ணி
வெய்யிலிலே போட்டுவைப்போம் மண்ணால் விலங்கு பண்ணித்
தண்ணீரில் போட்டு வைப்போம்.
தொகுப்பு. தமிழண்ணல்.
ஏண்ணே.. இது பாட்டா கெடைக்குமா? ஐ மீன் mp3?
தமிழன்னல் எழுதிய தாலாட்டு என்ற புத்தகம் இருக்கிறது. எம்.பி.3யாக கிடைக்கிறதா என்று தெரியவில்லை.
மதுரை சித்திரைத்திருவிழா குறித்த பதிவிலும், நாட்டுப்புறப்பாடல்களும் விடுகதைகளும் எனும் பதிவிலும் கொஞ்சம் தாலாட்டுப்பாடல்களை தொகுத்துள்ளேன்.
இன்றைய தலைமுறையினர்க்கு தாலாட்டு பாட நேரமில்லை. அதுபோன்ற சூழலுமில்லாமல் போவது வருத்தமான விசயம்.
அந்த பதிவுகள நான் போய் பாக்குறேன். 🙂 பின்னூட்டத்திற்கு நன்றி தல. 🙂
உங்கள் இந்தப் பதிவு படித்தவுடன் நான் என் பேரனுக்குப் பாடிய ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ நினைவுக்கு வந்தது.
நான் இரண்டடி பாடுவதற்குள்ளேயே தூங்க ஆரம்பித்துவிடும் குழந்தை. என் மகள் சொல்லுவாள்: பாட்டி பாடாதே…நானே தூங்கிடறேன்…ன்னு குழந்தை சொல்றாம்மா…’ என்று!
சித்திர வீதிக்காரரின் தொகுப்பை பார்க்க வேண்டும்!
பிள்ளை வயிற்று பேரன், பேத்திகளுக்குப் பாட வேண்டுமே!
நல்ல பதிவு டாக்டர்!
ரொம்ப நன்றி அம்மா. பின்னூட்டத்திற்கு நன்றி.
நான் பரவால்ல, கொஞ்சம் நியாபகம் வெச்சிருக்கேன். சிறுத்தை படப் பாட்டு பத்தி போட்டு இருந்தீங்க. அதே படம் தெலுங்குல விக்ரமார்க்குடுநு வந்தது. அதுல வர்ற தாலாட்டு இன்னும் அருமையா இருக்கும்..